

நம்மில் பெரும்பாலானவர்கள் வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்துதான் இருக்கிறோம். வீட்டு வங்கிக் கடனின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசும் வங்கிகளும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கிவருகின்றன. உதாரணமாக தனிநபர் கடனுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியை விகிதத்தைவிட வீட்டுக் கடனுக்குக் குறைவான விகிதத்தைதான் வங்கிகள் நிர்ணயித்துள்ளன. இதன் மூலம் வீட்டுக் கடனுக்கு வங்கிகள் அளிக்கும் முக்கியத்துவம் விளங்கும்.
வீட்டுக் கடனில் பெண்களுக் கெனத் தனிச் சலுகைகளும் இருக்கின்றன. பல வங்கிகள் வழக்க மாக உள்ள வட்டி விகிதத்திலிருந்து 0.5 சதவீதம் அளவுக்குப் பெண் விண்ணப்பதாரர்களுக்குச் சலுகைகள் வழங்கின்றன. இதனால் கணவன் – மனைவி இணைந்து கூட்டுக் கடனாக விண்ணப்பித்தும் இந்தச் சலுகையைப் பெற முடியும்.
இந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சொந்த வீடு வாங்குபவர்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும். ரூ. 45 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்குவதற்கு, இதற்கு முன்பு ரூ 1.5 லட்சம் மட்டுமே வட்டிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
அதை 2 லட்சம் அதிகமாக்கி ரூ.3.5 லட்சமாக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. இதன்படி மார்ச் 31, 2020 வரை, அதாவது இந்த நிதியாண்டு இறுதிவரை வீடு வாங்குவோருக்கு இந்தச் சலுகை கிடைக்கும். முதன் முறையாக வீடு வாங்கும் நடுத்தர மக்கள் இதன் மூலம் மிகுந்த அளவில் பயன் அடைவார்கள்.