Published : 20 Jul 2019 10:42 AM
Last Updated : 20 Jul 2019 10:42 AM

உங்கள் மனை பத்திரமாக இருக்கிறதா?

அனில் 

வீட்டு மனை வாங்குவது இன்றைக்கு ஒரு பெரும் முதலீடாக ஆகிவிட்டது. ஏனென்றால், பத்து இருபது வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டு மனையின் மதிப்பு இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் பலரும் வீட்டு மனைகளில் முதலீடுசெய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் ரியல் எஸ்டேட் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

தமிழ்நாட்டின் மிகச் சிறிய நகரங்களில் இருந்து மாநகரங்கள் வரை சேமிப்புத் திட்டம் மூலம் மனை வாங்கு அதிகரித்தது. இம்மாதிரி மனைகளை வாங்குவது ஒருவிதத்தில் சரியானதுதான். ஓய்வு காலப் பொருளாதாரத் தேவைகளுக்கு இவை ஏற்புடையவையாக இருக்கும். வாரிசுகளுக்குப் பயன் தரும். ஆனால், இம்மாதிரி மனைகளை வாங்குவதில் நாம் அதிகம் கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டு மனை வாங்கிவிட்டோம் எனச் சந்தோஷமாக வீடு வந்துசேர்ந்துவிடுவோம். ஆனால், அதன் பிறகுதான் வேலை இருக்கிறது. வாங்கிய உங்கள் மனையைப் பராமரிக்க 
வேண்டும்.

அதன் முன்பு வாங்கிய மனைக்கு பட்டா கோரிப் பெற வேண்டும். இப்போது பத்திரப் பதிவு மட்டும் போதாது. பட்டாவும் நிலத்துக்கு அவசியம் எனத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பட்டா இல்லாதபட்சத்தில் வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனையைப் பதிவுசெய்த ஆவணங்களைக் காட்டி பட்டா கோரி விண்ணப்பித்துப் பெற வேண்டும். அந்த மனைக்கு ஏற்கெனவே பட்டா வாங்கப்பட்டிருந்தால், அதை விற்றவரின் பெயரிலிருந்து நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பிற்காலத்தில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

இறந்துபோன தந்தை அல்லது தாய் பெயரில் மனை இருந்தால், பெயர் மாற்றம் செய்து நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்குத் தந்தை அல்லது தாயின் இறப்புச் சான்றிதழும் வாரிசு சான்றிதழும் தேவைப்படும். நாம் வாங்கிய மனை ஊருக்கு வெளியில் இருக்கும்பட்சத்தில் அந்த மனையைப் பராமரிப்பதில் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மனையைச் சுற்றி கல் நட்டு, சுற்று வேலிகள் அமைத்துக் கொள்வது நல்லது. அதுபோல ஒய்வு நேரம் கிடைக்கும்போது அடிக்கடி மனையைச் சென்று பார்க்க வேண்டும். சிலர் வாங்கிப் போட்டுவிட்டு ஆண்டுக் கணக்காக அந்தப் பக்கமே போகாமல் இருந்துவிடுவார்கள். கல்லும் நட்டவில்லை என்றால் உங்கள் மனையைப் பிரித்தறிவதே சிரமம். அதனால் குறைந்தது 4 மாதத்துக்கு ஒரு முறையாவது மனையைச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். வேலி அமைத்து மனையின் உரிமையாளாரான உங்கள் பெயரையும் எழுதி வைத்துவிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x