

கட்டிடம் என்பது பலவிதமான கட்டுமானப் பொருள்களின் சேர்க்கை. மணல், செங்கல், மரப் பலகைகள், கட்டுமானக் கம்பிகள், ஜல்லிகள் எனப் பலவிதமான பொருள்களை சிமெண்ட் கொண்டு இணைத்துதான் நம் கண் முன்னே கட்டிடம் ஓர் உருவமாக உயிர் பெறுகிறது. இந்தக் கட்டுமானப் பொருள்களில் ஒன்று குறைந்தாலும் கட்டிடம் முழுமையடையாது.
அதுபோல ஒன்றின் தரம் குறைந்தாலும் கட்டிடத்தின் ஆயுள் பாதிக்கப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானப் பொருள்களுக்கு இப்போது தட்டுப்பாடு அதிகம். நாள்தோறும் அதன் தேவை அதிகமாகிக்கொண்டேவருகிறது. ஆனால் அந்தத் தேவைக்கு ஏற்ப கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில்லை. மணல், செங்கல், ஜல்லி, பலகை போன்ற அத்தியாவசியமான கட்டுமானப் பொருள்கள் எல்லாம் இயற்கை நமக்கு அளிக்கக்கூடியவை.
இன்றைக்கு அதிகரித்துவரும் அசுரத்தனமான தேவைக்கு இயற்கையால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். ஒரு மரத்தை வெட்டி கதவு, ஜன்னல் செய்துகொள்கிறோம் என்றால், அதற்குப் பதிலாக மற்றொரு மரம் நடப்பட வேண்டும். அப்போது நாம் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கும். ஆனால் நாமோ மரத்தை வெட்டுவதில் காட்டும் வேகத்தை நடுவதில் காண்பிப்பதில்லை. அதுபோலத்தான் ஆற்று மணலும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் மணலை அள்ளினால் மண் வளம், நீர் வளம் எல்லாம் பாதிக்கப்படும். செங்கலைத் தயாரிப்பதற்கும் மண் எடுக்கப்படுகிறது. செங்கலைச் சுட விறகுகள் எரிக்கப்படுகின்றன.
இம்மாதிரியான சுரண்டல்களில் இருந்து இயற்கையைப் பாதுகாப்பது அவசியமானது. இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டுதான் இன்று உலகம் முழுவதும் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாதிரியான ஆராய்ச்சிகளின் விளைவாக மாற்று மணல், மாற்றுக் கட்டுமானக் கற்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு ஓரளவு நடைமுறைக்கும் வந்துள்ளன. கதவுகளுக்கும், ஜன்னல்களுக்கும் மாற்றுப் பொருள்கள் வந்துவிட்டன. இதன் தொடர்ச்சியாக மாற்று ஜல்லிக்கான ஆராய்ச்சிகளின் விளைவாகச் செயற்கை ஜல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மேலை நாடுகளில் ஓரளவு புழக்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
தயாரிக்கும் முறை
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பலவிதமான கழிவுகளை மூலப் பொருள்களாகக் கொண்டு இந்த வகை ஜல்லி தயாரிக்கப்படுகிறது. இரும்புத் தொழிற்சாலைகளில் உண்டாகும் இரும்புக் கழிவுகளின் துகள்களை யும் மூலப் பொருளாகக் கொள்ளலாம். மேலும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நிலக்கரிச் சாம்பலையும் மூலப் பொருளாகக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாது கடற்கரைக் களிமண்ணையும் இதன் பகுதிப் பொருளாகக் கொள்ளலாம். இத்துடன் சோடியம் கலந்து ஆயிரம் டிகிரி செல்சியஸ் சூடேற்ற வேண்டும்.
செயற்கை ஜல்லி அவசியம் ஏன்?
பொதுவாக ஜல்லி இயற்கையான முறையில் இருந்து கிடைக்கக்கூடியது. அதை வெட்டித் துண்டாக்கி நாம் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறோம். இம்மாதிரி யான இயற்கை ஜல்லி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அதனால் கிடைக்கும் இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு இதைக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே கட்டுமானப் பொருள்களில் தட்டுப்பாட்டுடன் இந்தப் பயணச் செலவும் சேர்ந்து மிக அதிக செலவைக் கொண்டுவந்துவிடும்.
உதாரணமாகத் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்கு மணல் குவாரி இல்லை. திருச்சியில் இருந்துதான் அதிகமாக ஆற்று மணல் கட்டுமானத்துக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஆற்று மணலின் விலை அங்கு மிக அதிகமாக இருக்கிறது. இதைச் சமாளிக்க திருநெல்வேலிப் பகுதிகள் எம்-சாண்ட் என அழைக்கப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் வெளிப்பூச்சுக்கு மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பது ஆரோக்கியமான மாற்றம். இதுபோல் செயற்கை ஜல்லியையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். செலவு ஒரு பக்கம் குறைவானாலும் அதைவிடச் சுற்றுச்சூழலுக்கும் செயற்கை ஜல்லி ஏற்றதாகும். மேலும் செயற்கை ஜல்லி எடை குறைவானது.
உறிஞ்சுப்படும் தன்மையும் அதிகம். சிமெண்ட்டுடன் உடனே பிணைந்து கட்டுமானத்தின் உறுதியைக் கூட்டும். தொழிற் சாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுதால் சுற்றுச்சூழலுக் கும் ஏற்றது. பலவிதப் பயன்பாடு உள்ள இந்தக் கட்டுமானப் பொருள் விரைவில் பரவலான பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.