Last Updated : 07 Jan, 2017 10:28 AM

 

Published : 07 Jan 2017 10:28 AM
Last Updated : 07 Jan 2017 10:28 AM

கிரயப் பத்திரத்தைச் சரிபார்ப்பது எப்படி?

விற்பனையாளர் மூலம் வாங்குவதற்குக் கிரயப் பத்திரம் மூலம் சொத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கிரயப் பத்திரத்துக்கான முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணம் அப்பத்திரம் பதிவுசெய்யும்போது செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சொத்து வழிகாட்டு மதிப்பின் மேல் 7ரூ முத்திரைத் தாள் மற்றும் 1ரூ பதிவுக் கட்டணம் கிரயப் பத்திரத்துக்குச் செலுத்த வேண்டும்.

கிரயப் பத்திரத்தில் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் டிஜிட்டல் பத்திரப் பதிவு துறையின் மூலம் எடுக்கப்படுகின்றன. (இந்தச் சேவை தமிழ்நாட்டில் 2 ஆண்டுக் காலமாக அமலில் உள்ளது.) சில மாநிலங்களில் சாட்சிகளின் புகைப்படமும் கிரயப் பத்திரத்தில் இடம் பெறுகிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிரயப் பத்திரம் பதிவுசெய்யும் முன்பு இணையத்தில் அக்கிரயப் பத்திரத்துக்கான முழு விவரங்களையும் முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும். அதாவது விற்பனையாளர் வாங்குபவர் சொத்து விபரம், கிரயத் தொகை, முத்திரை வரி செலுத்தும் விவரம், சாட்சிகள் போன்ற விவரங்களை கிரயப் பத்திரம் பதியும் முன் இணையத்தில் பூர்த்திசெய்ய வேண்டும்.

கிரயப் பத்திரத்தில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:

# முத்திரை வரி முறையாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முத்திரைத் தாள், வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூலம் முத்திரை வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

# விற்பனையாளர், வாங்குபவர் கையோப்பம் இடம் பெற வேண்டும். 2003க்கு முன் விற்பனையாளர் கையொப்பம் மட்டும் கிரயப் பத்திரத்தில் இடம் பெற்றிருக்கும்.

# கிரயப் பத்திரத்தில் எந்த ஒரு நிபந்தனையும் குறிப்பிட்டிருக்கக் கூடாது.

# கிரயப் பத்திரத்தில் ஒரு வேளை விற்பனையாளாரின் சொத்து உரிமையில் பிற்காலத்தில் ஏதாவது பிரச்சினை எழுந்தால் தகுந்த நஷ்ட ஈடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் என்று கிரயப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

# சொத்து விவரம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

# கிரயப் பத்திரத்தில் விற்பனையாளருக்கு அச்சொத்து வந்த முறை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

# ஒரு வேளை பவர் பத்திரம் மூலம் கிரயப் பத்திரம் பதிவுசெய்யும்போது முகவருக்குக் கிரயம் செய்யும் அதிகாரம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முதன்மையாளர் பவர் பத்திரத்தை ரத்து செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அதே போல் முதன்மையாளர் உயிருடன் உள்ளாரா என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கிரயப் பத்திரத்தின் அசல் தன்மை சரிபார்க்கும் முறை

போலிப் பத்திரங்கள் மூலம் ஏமாறும் நபர்கள் ஏராளம். நீங்கள் சொத்து வாங்கும் முன் உங்கள் விற்பளையாளரின் கிரயப் பத்திரம் அசல் பத்திரம்தானா என்று உறுதி செய்யப் பட வேண்டும்.

நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் ஆவணம் விண்ணப்பித்துப் பெற வேண்டும். மேலும் அந்த நகல் ஆவணம் விற்பனையாளரின் ஆவணத்துடன் சரி பார்க்க வேண்டும்.

நகல் ஆவணம் 2 வகைப்படுத்தப் பட்டுள்ளது.

அ) நகல் ஆவணம்.

ஆ) கையால் எழுதப்பட்ட (Manual) நகல் ஆவணம்.

ஒரு நகல் ஆவணத்தை எளிய முறையில் சரிபார்க்க முடியும். சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ள நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும் வகையில் எல்லா ஆவணமும் ஒத்திருக்க வேண்டும்.

கையால் எழுதப்பட்ட நகல் ஆவணத்தை அசல் ஆவணத்துடன் ஒப்பிடும்போது விற்பனையாளரின் பெயர் வாங்குபவரின் பெயர், கிரயத் தொகை, சொத்து விபரம் சரிபார்க்க வேண்டும். மேலும் பத்திரத்தாள், எண், பத்திரத் தாள் முத்திரை, பத்திரத் தாள் விற்பனையாளர், பத்திர எண், தொகுதி எண் மற்றும் பக்கம் எண் போன்ற விவரங்கள் அசல் பத்திரம் மற்றும் கையால் எழுதப்பட்ட நகல் ஆவணம் ஒப்பிடும்போது சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

- கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x