Last Updated : 08 Mar, 2014 01:01 PM

 

Published : 08 Mar 2014 01:01 PM
Last Updated : 08 Mar 2014 01:01 PM

மூங்கில்களிலும் கட்டலாம் வீடு!

வீடுகளைக் கட்டும்போது அதிகம் செலவு வைப்பதில் மரம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதற்கு மாற்றாகச் சில பொருட்களையும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் மரம் மற்றும் ஸ்டீலுக்கு மாற்றாக உறுதியையும், நீண்டகால தாங்கு திறனையும் மூங்கில்களாலும் அளிக்க இயலும்.

உலகிலேயே மூங்கில் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது இந்தியா. உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மூங்கில் பொருட் களைக் கட்டுமானத்திற்கு திறம்படப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியக் கட்டுமானத் துறையில் மட்டும் மூங்கில் களின் பயன்பாடு இன்னும் அதிகம் உணரப்படவேயில்லை.

நன்கு வளர்ந்த மூங்கிலைக் கொண்டு தளம், ஃப்ளைவுட், அறைகலன்கள் மற்றும் லேமினேட்களை அமைக்கமுடியும். சூழலை மாசுபடுத்தாத, பாதுகாப்பான கட்டுமானப் பொருளாகவும் மூங்கில் இருக்கிறது.

இந்தியாவில் 175 வகை மூங்கில்கள் வளர்கின்றன. இந்தியாவின் மொத்த மூங்கில் வளர்ச்சி யில் 20 சதவீதப் பங்கை வகிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம், உள்ளது. வடகிழக்குப் பிராந் தியத்தில் 28 சதவீத மூங்கில் மரங்கள் உள்ளன. இத்தனை மூங்கில் வளம் இருந்தும், வீட்டுக் கட்டுமானத் துறையினர் கான்கிரீட்டுக்கு நல்ல மாற்றாக இருக்கும் மூங்கிலைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கவே இல்லை. பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கும் நம் நாட்டில், குறைந்த விலையில் அவர்களுக்கு குடியிருப்புகளைக் கட்டுவதற்கான தேவை இருக்கும் சூழலில் மூங்கில் நல்ல கட்டுமானப் பொருளாக மாற வேண்டியது அவசியம். ஒரு வீட்டின் செலவில் 40 சதவீதத்தை மூங்கில் பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் குறைத்துவிட முடியும். அத்துடன் வீட்டின் ஆரோக்கியச் சூழலும் மூங்கில் பொருட்களால் மேம்படும். ஒரு மூங்கில் கம்பு உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் ஒருவரின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையானது.

பருவநிலைக்கு ஒத்து வருமா?

மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. நில அதிர்வு வாய்ப்புள்ள பகுதிகளில் வீடுகளைப் பாதுகாப்பாகக் கட்டுவதற்கு மூங்கில் சிறந்த கட்டுமானப் பொருளாக இருக்கிறது. ஏனெனில் நில அதிர்வு விபத்துகளில், மூங்கில் லேசாக இருப்பதால் மனிதர்களுக்குப் பாதிப் பை ஏற்படுத்துவதில்லை. அதே வேளையில் மூங்கிலின் தசைநார்கள் இரும்பை விட வலிமையாவை.

இரும்புக் கம்பிகளால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட்டுக்கு மாற்றாகத் தற்போது மூங்கில்களால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட் பல நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுவர்கள், தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைப்பூச்சுகளுக்கும் மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் விசிறி பிளேடுகளைக்கூட மூங்கிலில் செய்கின்றனர். மூங்கில் பொருட்களினால் 2,500 பயன்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூங்கிலை நாம் பயன்படுத்துவதில் பின்தங்கி இருக்கிறோம் வெள்ளை யர்கள் மூங்கிலை ஏழைகளின் மரப் பொருள் என்று அழைத்தனர். அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு நமது மரபான அறிவைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான உறுதியான கட்டிடங்களை நாம் கட்டியுள்ளோம். ஆனால் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் மரத்தைப் பயன்படுத்தினால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும் என்ற மனநிலையைக் கொண்டுவந்தனர்.

ஏனெனில் ஐரோப்பாவில் அக்காலத்தில் மரம் மட்டுமே கிடைத்துவந்தது. அஸாமில் நூறாண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்கும் மூங்கிலால் கட்டப்பட்ட கட்டிடங்கள் உண்டு. தற்போதும் கூட, பெங்களூருக்கு அருகே உள்ள தேவனஹள்ளியில் நூற்றுக்கணக்கான வீடுகள் மூங்கில் பொருட்களால் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அருமையாகத் தாக்குப்பிடிக்கின்றன.

மூங்கில் ஏன் நல்லது?

மூங்கில் இயற்கையாக மக்கி அழியக் கூடியது. ஆனாலும், வெகு காலம் தாக்குப்பிடிப்பதற்கு நவீன வேதிச் செயல் முறைகளைக் குறைவான செலவில் செய்ய முடியும். அரசுக் கொள்கைகளும் மூங்கில் பயன்பாட்டுக் கொள்கைகளைப் பொறுத்த அளவில் மாற வேண்டும். காட்டிலிருந்து மூங்கிலை எடுப்பதற்கு அரசு ஒப்புதல் கொடுப்பதை எளிமையாக ஆக்க வேண்டும்.

அத்துடன் விவசாயிகள் பண்ணை அமைத்து, மூங்கில்களைப் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு உரிமங்களும் வழங்க வேண்டும். ஒரு மூங்கில் செடி, கட்டுமானத் தரத்திலான மூங்கிலைத் தருவதற்கு நான்கு வருடங் களில் தயாராகிவிடும். மூங்கிலைப் பயன்படுத்த நாம் தயாராக வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத, வளமும் குன்றாத மூங்கில் வளத்தை இந்த தலைமுறையினராவது வேகமாக உணர்வார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x