Published : 19 Apr 2014 12:03 PM
Last Updated : 19 Apr 2014 12:03 PM

அடமான வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புறநகர்ப் பகுதியில் ஒரு ஃபிளாட் வாங்கினார் ரமேஷ். அவருக்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்தது. பணியிட மாற்றம் காரணமாக ஃபிளாட்டை விற்றுவிட முடிவு செய்கிறார் ரமேஷ். வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த ஃபிளாட்டை வாங்கினார். வங்கிக்கு முறையாக இ.எம்.ஐ.யும் செலுத்திவருகிறார். தற்போது வீட்டை விற்க முடிவு செய்துவிட்டதால் அவரது நண்பர், அந்த ஃபிளாட்டை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், அவர் இந்த வீட்டை விற்க முடியுமா? முடியும் என்றால், அதற்கான நடைமுறைகள் என்ன?

வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ நிச்சயமாக விற்கலாம். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் இல்லை. இதற்காகச் சில வழிமுறைகள் வறையறுக்கப்பட்டுள்ளன. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வாங்குபவர், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

* வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுக்கப்படுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப் பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

* இவை தவிர, சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.

* வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நண்பரிடம் கொடுக்க வேண்டும்.

* வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு, வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்க வேண்டும். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

* ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழு தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு நிறைவுற்றதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு அத்தாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

* வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், ஃபிளாட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அடமான வீட்டுக்கடன்

உங்கள் கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. இதன்படி மேற்கூறிய நடைமுறைகளில் முதல் மூன்று நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.

* தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

* வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.

* வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.

* கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.

* அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலையில் அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்பினருக்கும் நேரமும் சிரமமும் கணிசமாகக் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x