

நா
ன்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கினார் தினேஷ். அவருக்கு டெல்லியில் நல்ல வேலை கிடைத்தது. பணியிட மாற்றம் காரணமாக வீட்டை விற்க முடிவுசெய்கிறார் தினேஷ். வங்கியில் வீட்டுக் கடன் வாங்கித்தான் அந்த வீட்டை வாங்கியிருந்தார் அவர். வங்கிக்கு முறையாகத் தவணைத் தொகையையும் (இ.எம்.ஐ.) செலுத்தி வருகிறார். தற்போது வீட்டை விற்க முடிவு செய்துவிட்டதால், அவருடைய நண்பர், அந்த வீட்டை வாங்கிக்கொள்ள விரும்புகிறார். 15 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், அவர் இந்த வீட்டை விற்க முடியுமா? முடியும் என்றால், அதற்கான நடைமுறைகள் என்னென்ன?
வங்கியில் அடமானம் வைத்துள்ள தனி வீட்டையோ அடுக்குமாடி வீட்டையோ நிச்சயமாக விற்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை வாங்குபவருக்கும் எந்தவித சட்டப் பிரச்சினையும் ஏற்படாது. ஆனால், இதற்குச் சில வழிமுறைகளை வங்கிகள் வரையறுத்துள்ளன. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வாங்குபவர், சொந்தமாகக் கையில் உள்ள பணத்தில் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோமே. அதற்குச் சில நடைமுறைகள் உள்ளன.
வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை, வட்டித் தொகை எவ்வளவு என்பது போன்ற விஷயங்களைப் பெற வங்கியிடம் கடிதத்தை அளிக்க வேண்டும். அது மட்டுமல்ல வங்கிக்கு முன்னதாகக் கொடுத்த அனைத்து ஆவணங்களின் பட்டியலையும் எழுத்துப்பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீடு தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுக்க வங்கிக்கு ஆட்சேபனை இல்லை என்று கடன் கொடுத்த வங்கி எழுதிக் கொடுக்கும்.
வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகல், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நண்பரிடம் வழங்க வேண்டும்.
வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வழக்கறிஞரிடம் காட்டி, சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு, வீட்டின் சொந்தக்காரருக்கு முன் பணம் கொடுக்க வேண்டும். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி, இரு தரப்பும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு நிறைவுற்றதற்கு அடையாளமாக, வங்கியிடமிருந்து ஒரு அத்தாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வங்கியிடமிருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவரிடம் கொடுத்து, அவரிடமிருந்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்கு கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஒரு வேளை உங்கள் கையில் பணம் இல்லை. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கித்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. மேற்கூறிய நடைமுறைகளில் முதல் மூன்று நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன்பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன.
தன்னிடம் கொடுத்த அனைத்து ஆவணங்கள் வங்கியின் கடிதங்களை வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஒளிப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றை வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்கெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.
வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரடியாகக் கொடுக்கும்.
கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.
அதன்பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் அடமானம் வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக் கொள்வது நல்லது. இதனால் இரு தரப்பினருக்கும் நேரமும் சிரமமும் கணிசமாகக் குறையும்.