Last Updated : 27 Sep, 2014 12:33 PM

 

Published : 27 Sep 2014 12:33 PM
Last Updated : 27 Sep 2014 12:33 PM

பழைய வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

சொந்த வீடு கனவில் உள்ள பலரும், புது வீடுகளை மட்டுமே வாங்க நினைப்பதில்லை. பழைய வீடுகள் என்றாலும் வாங்கத் தவறுவதில்லை.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புதிதாக வீடு வாங்க விரும்பினால் வங்கியில் வீட்டுக் கடன் கிடைப்பது போலப் பழைய வீடுகளை வாங்கவும் வங்கிக் கடன் கிடைக்குமா?

சிக்கல், கெடுபிடி

பழைய வீட்டுக்கு வங்கிக்கடன் கிடைக்காது என்றும் கிடைக்கும் என்றும் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். உண்மையில் பழைய வீடுகள் வாங்கவும் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம் என்றே கூறு கிறார்கள் வங்கியாளர்கள்.

ஆனால், பழைய வீடுகளுக்கு வங்கிக் கடன் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பழைய வீட்டுக்குக் கடன் வாங்க நிறையக் கெடுபிடிகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள். சரி, என்னென்ன சிக்கல்கள், கெடுபிடிகள் இருக்கின்றன என்று பார்த்துவிடுவோம்.

இப்போது நீங்கள் புதிய வீடு வாங்குவதாக வைத்துக் கொள்வோமே. புதிய வீட்டின் மதிப்பை மதிப்பிடுவது மிகவும் சுலபம். அதற்காக வழக்கமாக ஆவணங்கள் அளிப்பதும், விதிமுறைகளைப் பின்பற்றிக் கடன் வழங்குவதும் எளிது. எனவே புதிய வீட்டுக்கு வங்கிக் கடனைச் சுலபமாகப் பெறலாம்.

மதிப்பீடு

இதே பழைய வீட்டுக்குக் கடன் என்று வரும்போது வீட்டை மதிப்பீடு செய்வதே கொஞ்சம் கடினம். பொதுவாக வீட்டுக் கடன் வழங்க வசதியாக வங்கி சார்பில் வீட்டை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர் ஒருவர் வருவார்.

அவர் மதிப்பீடு செய்து வீடு கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, வீடு வலுவாக உள்ளதா இல்லையா? தாங்கு திறன் எவ்வளவு? எனப் பல அம்சங்களில் வீட்டை மதிப்பிடுவார். அவரது மதிப்பீட்டு அறிக்கையை வங்கியிடம் தருவார். அதன் அடிப்படையில் வங்கி பழைய வீட்டுக்குக் கடன் வழங்குவது பற்றி முடிவு செய்யும்.

வீட்டுக்கடன் எவ்வளவு?

புதிய வீட்டுக்கு ரூ. 10 லட்சம் தருவார்கள் என்று வைத்துக் கொண்டால் பழைய வீட்டுக்கு அதிகபட்சமாக 7.50 லட்சம் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரி எஸ்.ஜி.கிருஷ்ணன். “ பழைய வீட்டின் மதிப்பு குறைவாகவே மதிப்பிடப்படும். தனி வீடாக இருந்தால் இடத்துக்கான மதிப்பு கூடியிருக்கும்.

எனவே அதை வைத்தும் கடன் வழங்குவதும் உண்டு. அதேசமயம் அடுக்குமாடி பழைய வீடாக இருந்தால், இடம் 300 சதுர அடி, 200 சதுர அடி என்றே பிரித்துக் கொடுப்பார்கள். அதனால் பெரிய அளவில் கடன் வாங்க முடியாது. அதுமட்டுமல்ல பழைய வீட்டுக்குக் கடன் வாங்கிவிட்டு அதற்கு இ.எம்.ஐ. செலுத்த வழங்கப்படும் கால அவகாசம் குறைவாகவே இருக்கும்” என்கிறார் கிருஷ்ணன்.

மார்ஜின் தொகை கூடும்

புதிய வீட்டுக்குக் கடன் வாங்கும்போது 10 முதல் 15 சதவீதம் மார்ஜின் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. ஆனால் பழைய வீடாக இருந்தால், 20 சதவீதமோ அல்லது 25 சதவீதமோ தொகையை வைத்திருக்க வேண்டும். வழக்கமான மார்ஜின் தொகையைவிட 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படிப் பல பிரச்சினைகள் இருப்பதால் பெரும்பாலான வங்கிகள் பழைய வீடுகளுக்குக் கடன் அளிக்கக் கெடுபிடிகள் காட்டவும் செய்கின்றன. ஆனால், பழைய வீட்டுக்குக் கடன் பெற முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x