Last Updated : 20 Sep, 2014 01:09 PM

 

Published : 20 Sep 2014 01:09 PM
Last Updated : 20 Sep 2014 01:09 PM

அதிகரிக்கும் அப்பார்ட்மென்ட் விற்பனை

சென்னையைப் பொறுத்தவரை, 40% அதிகமான முதலீட்டாளர்கள் வீட்டு மனைகளை வாங்கவே விரும்புகின்றனர். அதேபோல், அபார்ட்மென்ட் வாங்கவும் 40% பேர் விரும்புகின்றனர்.

ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு மனைகள் கிடைப்பது சற்றே கடினமாகி இருப்பது, அதன் தேவையை விட 4% பற்றாக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது. வங்கிக் கடன் மூலம் வீட்டுமனை வாங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்காக, DTCP அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை, மனை விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டியிருப்பதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், சென்னையில் புதிதாகக் கட்டப்படும் அபார்ட்மென்ட்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், தேவையை விட 11% அதிகமாகவே அதன் உற்பத்தி இருக்கிறது.

இதனால், முழுமையாகக் கட்டப்பட்டும் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கையும் கடந்த சில மாதங்களாக சென்னையில் அதிகரித்து வருகிறது. இதுஒருபுறம் என்றால், போரூர் மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தைத் தொடர்ந்து, போரூரில் ரியல் எஸ்டேட் முதலீடு கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் ஏழு சதவீகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

அதேநேரத்தில், கூடுவாஞ்சேரி, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளுக்கு அடுத்தபடியாக முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கும் இடமாக போரூர் இருக்கிறது. விலை குறையும் போது அங்கு முதலீடுகள் அதிகரிப்பது ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையான நிகழ்வுதான் எனக் கூறும் முதலீட்டு ஆலோசகர்கள், இந்த நிலை அடுத்த சில மாதங் களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என்றே தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்த விலை வீடுகளுக்கு இருக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு கட்டுமானத்துறை நிறுவனங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையிலான வீடுகளை அதிக அளவில் கட்டத் தொடங்கியதன் விளைவாக சென்னையில், அவற்றின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த உற்பத்தியில் 22% என்ற அளவை எட்டியுள்ளது.

ஆனால், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அவற்றின் தேவை வெறும் 6% ஆக இருப்பதால், ரூ.20 லட்சத்திற்கு உட்பட்ட வீடுகள் அதிகளவில் காலியாக உள்ளன. அதே நேரத்தில் 1BHK எனப்படும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளின் தேவையும், உற்பத்தியும் சரிசமமாக இருப்பதால், 1BHK வீடுகள் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்து விடுவதாகவும் கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

அபார்ட்மென்ட், தனி வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அபார்ட்மென்ட்களுக்கான தேவை 40% ஆக இருந்தாலும், அதன் உற்பத்தி 50% அதிகமாக இருப்பதால், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருக்கும் அபார்ட்மென்ட்களில் குறிப்பிடத்தக்க அளவு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் காலியாகவே இருக்கின்றன.

சென்னை புறநகர்ப் பகுதிகளில், குறிப்பாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் இதுபோன்ற நிலை அதிகம் காணப்படுகிறது. அதேநேரத்தில் தனி வீடுகளைப் பொறுத்தவரை அவற்றின் தேவை 18% அளவுக்கும் இருந்த போதிலும், அதன் உற்பத்தி அளவு 12% ஆக இருப்பதால், தேவை அதிகரித்துள்ளது.

சென்னையில், புதிதாக சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் கூடுவாஞ்சேரி முதலிடத்தில் இருக்கிறது. கூடுவாஞ்சேரிக்கு அடுத்தடுத்த இடங்களில் பழைய மகாபலிபுரம் சாலை, போரூர், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்கள் இருக்கின்றன.

இதில் மேடவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் வீடுகள் வாங்க முதலீட்டாளர்கள் விரும்புவதற்கு, அப்பகுதிகள் மற்ற இடங்களுடன் சாலை மார்க்கமாக நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ளதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கொளத்தூர், பள்ளிக்கரணை, தாம்பரம் ஆகிய இடங்களும் முதலீட்டாளர்கள் விரும்பும் பகுதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில், கிண்டி, குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் தனி வீடு அல்லது அபார்ட்மென்ட் வாங்க குறைந்த அளவிலான முதலீட் டாளர்களே விரும்புகின்றனர் என ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர்.

இதுஒருபுறம் என்றால், திருவள்ளூர், மப்பேடு, பொன்னேரி போன்ற பகுதிகளில் 20 லட்சத்திற்கும் குறைந்த விலையிலான வீடுகள் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன. புறநகர் ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்தை நம்பி இந்தப் பகுதிகளில் வீடுகளை வாங்க மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. சென்னை புறநகர்ப் பகுதியான வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரியை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புறவழிச்சாலை (Outer Ring Road - ORR) அண்மையில் திறக்கப்பட்டது.

இந்தச் சாலையின் நீளம் 27 கி.மீ. இதனை மீஞ்சூர் வரை விரிவுபடுத்தத் தேவையான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது, சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்திடும் எனக் கூறப்

படுகிறது. இப்பணிக்காக நெமிலிச்சேரியில் இருந்து மீஞ்சூர் வரை சுமார் 270 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மீஞ்சூர் வரை இந்தச் சாலை கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், வண்டலூரில் இருந்து மீஞ்சூர் இடையிலான தொலைவு சுமார் 57 கி.மீ. ஆக இருக்கும்.

அதே நேரத்தில், இந்தச் சாலைகளில் 100 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும் என்பதால், வட சென்னையில் இருந்து தென் சென்னைக்கான போக்குவரத்து நேரமும் வெகுவாகக் குறைந்து விடும். இதுபோன்ற காரணிகளால், சென்னை புறநகர்ப் பகுதியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி வேகம் பிடிக்கும் என நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x