Last Updated : 09 Aug, 2014 12:00 AM

 

Published : 09 Aug 2014 12:00 AM
Last Updated : 09 Aug 2014 12:00 AM

குறையாத வழிகாட்டி மதிப்பு குறைந்து வரும் நில விற்பனை

தமிழ்நாடு முழுவதுமே நில விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு நிலப் பரிமாற்றமும் குறைந்துள்ளது. ஆனால் நிலப் பரிமாற்றம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிக அளவில் வீட்டு மனைகளாக விற்கப்படுகின்றன. அதுபோல விவசாயத்திற்கு வாய்ப்புள்ள சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விற்கப்படுகின்றன.

உதாரணமாக மணப் பாக்கத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் மறைமலை நகர்ப் பகுதிகளிலும் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகக் கைமாற்றப்பட்டுவருகின்றன. இதனால் சென்னை, தஞ்சை போன்ற பகுதிகளில் ரியல் எஸ்டேட் இவ்வளவு தேக்கமான நிலையில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மற்ற மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் அதல பாதாளத்தில் விழுந்துள்ளதாக அத்தொழிலில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கிறார்கள்.

கடலூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து மந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர், நாகர்கோவில், வேலூர் பகுதிகளில் மிதமான நிலையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மந்த நிலையிலும் தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் ரியல் எஸ்டேட் வெற்றிக் கொடிகட்டிக்கொண்டுள்ளது.

முக்கியமாக ராஜீவ் காந்தி சாலை, ஜிஎஸ்டி சாலை, பெங்களூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக உள்ளது. மேலும் இப்போது மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் வடசென்னைப் பகுதியான பொன்னேரியில் ரியல் எஸ்டேட் வளம்பெறத் தொடங்கியிருக்கிறது.

அரசின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் நிலையில்லாத விலை உயர்வு போன்ற காரணங்கள் இந்த நிலப் பரிமாற்றக் குறைவுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. 2012-ம் ஆண்டு அரசின் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பைத் (Guideline Value) தமிழக அரசு உயர்த்தியது.

அதன்படி நிலம் வாங்குபவர்கள் வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப் பதிவுக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என மொத்தக் கட்டணம் நிலத்தின் மதிப்பில் 50 சதவிகிதம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆணை 2012 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு வருமானம் அதிகரித்தது. ஆனால் நில விற்பனை பாதிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் தொழிலும் அதைச் சார்ந்த கட்டுமானத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2013 - 2014 நிதியாண்டில் மட்டும் அரசுக்கு வழிகாட்டி மதிப்பின் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் நில வழிகாட்டி தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசிய தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், “வழிகாட்டி மதிப்பை மறுசீரமைக்க வாய்ப்பு இல்லை”எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அப்படிக் குறைக்கப்படும் பட்சத்தில் இப்போது வாங்குவதைத் தவிர்க்கலாம் எனப் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இதுதான் ரியல் எஸ்டேட் தேக்க நிலையின் மிக முக்கியமான காரணம் என நாம் மேற்கொண்ட கள ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றன. இதனால் பாதிப்பு நடுத்தர மக்களுக்குதான். இம்மாதிரி தேக்க நிலை இருப்பதால்

நிலப் பரிமாற்றம் தடைபட்டுள்ளதே தவிர, நிலத்தின் மதிப்பு குறையவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x