Last Updated : 11 Aug, 2018 12:33 PM

 

Published : 11 Aug 2018 12:33 PM
Last Updated : 11 Aug 2018 12:33 PM

மாட்சிமை மிக்க கை நாற்காலிகள்

கை நாற்காலிகள் (Armchairs) பெரிதாக இருப்பதால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்ற காரணத்தால் பெரும்பாலானவர்கள் அவற்றை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். ஆனால், வீட்டுக்குப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்க நினைப்பவர்களுக்குக் கை நாற்காலிகள் பெரிய உதவியாக இருக்கும். அத்துடன், வீட்டின் வடிவமைப்பை மறுவடிவாக்கம் செய்ய நினைப்பவர்களும் கை நாற்காலிகளைத் தயக்கமில்லாமல் தேர்ந்தெடுக்கலாம்.

‘கிளாசிக்’ நாற்காலி

 ‘கிளாசிக்’ தோற்றத்தை விரும்புபவர்கள் கை நாற்காலிகளில் ‘லெதர்’ நாற்காலிகளைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமாக இருக்கும். ‘லெதர்’ மட்டுமல்லாமல் அதனுடன் மரமும் கலந்திருந்திருப்பது ‘கிளாசிக்’ தோற்றத்தை மேம்படுத்தும். ஓய்வெடுப்பதற்கான நாற்காலியை வாங்குபவர்கள் ‘லெதர்’ நாற்காலியைத் தேர்வுசெய்யலாம். வாசிப்பு அறையில் பயன்படுத்தவதற்கு இந்த நாற்காலி சரியான தேர்வாக இருக்கும்.

‘ஃப்ளோரல்’ நாற்காலி

அறைக்குப் புத்துணர்ச்சியான தோற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ‘ஃப்ளோரல்’ கை நாற்காலிகளைத் தேர்ந்தெடுக்கலாம். வரவேற்பறையிலும் படுக்கையறை மூலையிலும் இந்த நாற்காலியை வைப்பது பொருத்தமாக இருக்கும். இந்த ஒரெயொரு நாற்காலியை வைத்து வீட்டின் தோற்றத்தைத் தலைகீழாக மாற்றிவிடமுடியும். இந்த ‘ஃப்ளோரல்’ கை நாற்காலியின் விலை பதின்மூன்று ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

பாரம்பரிய நாற்காலி

பாரம்பரியமான தோற்றத்தை விரும்புபவர்கள் மரத்தாலான கை நாற்காலியைத் தேர்வு செய்யலாம். முழுவதும் மர அறைக்கலன்கள் நிறைந்த ஓர் அறையில் வைப்பதற்கு இந்த நாற்காலி பொருத்தமாக இருக்கும். அத்துடன், சமகால அலங்காரத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் அறையிலும் இந்த நாற்காலி பொருந்திப்போகும். அடர் மர நிறத்தில் மென் நிற மெத்தையுடன் இருக்கும் கை நாற்காலியை வாங்கலாம். இது வீட்டுக்குப் பாரம்பரியம் கலந்த கம்பீர தோற்றத்தைக் கொடுக்கும். இதன் விலை பத்தாயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
 

தலையுயர நாற்காலி

தலையைச் சாய்த்துவைத்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தலையுயர கை நாற்காலிகளை இப்போது பலரும் விரும்பிவாங்குகின்றனர். இரண்டுபுறமும் தலையைச் சாய்த்துவைத்துக்கொள்ளும்படியும் இந்த நாற்காலிகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டில் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த அறையை நேர்த்தியாக மாற்றிவிடும் வலிமை இந்த நாற்காலிகளுக்கு உண்டு.

நவீன நாற்காலி

நவீன வடிவமைப்பில் கிடைக்கும் கை நாற்காலிகளை பால்கனியிலும் தோட்டத்திலும் பயன்படுத்தலாம். வித்தியாசமான வடிவமைப்பில் இந்தக் கை நாற்காலி வெளிப்புற அலங்காரத்துக்கு ஏற்றவையாக இருக்கின்றன. நீலம், மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களில் இந்த நாற்காலிகளைத் தேர்ந்தெடுப்பது உகந்ததாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x