Last Updated : 05 May, 2018 10:47 AM

 

Published : 05 May 2018 10:47 AM
Last Updated : 05 May 2018 10:47 AM

கோடையைக் குளிர்விக்கும் அலங்காரம்

மே

மாதம், பள்ளிக் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, வெயிலுக்கும் ஆனது. நம் துணைக் கண்டத்தை விளையாட்டு மைதானமாக்கி தன் ஆட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. இந்த வெயிலைச் சமாளிக்க நாம் பல ஏற்பாடுகளைச் செய்கிறோம். அதுபோல வீட்டு அலங்காரத்திலும் சில மாற்றத்தைச் செய்யலாம். மண்ணால் செய்த சிலைகள், பூத் தொட்டிகள், தொங்கட்டம் கொண்டு வீட்டு அலங்காரத்தை மாற்றிப் பார்க்கலாம். அது பார்ப்பதற்கு நம் கண்களுக்கும் மனத்துக்கும் குளிர்ச்சியைத் தரும்.

ஓசை எழுப்பும் சிம் (chime) அலங்கார மாலைகள் மூங்கில், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பொருட்களில்தான் முன்பு சந்தையில் கிடைத்தது. இப்போது டெரகோட்டாவிலும் சிம் வந்துவிட்டது. அதிலும் நீலம், சிவப்பு, பச்சையெனப் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. நம்முடைய பாரம்பரியமான பூஜை மணியின் வடிவத்தில் இவை உள்ளன என்பது சிறப்பு. இதன் தொடக்க விலை ரூ. 80.

பால்கனியை அழகாக்கவென்று சில தனிப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் சிறு மட்பாண்டங்கள் போன்ற பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகளும் பலவிதமான வடிவங்களில் கிடைக்கின்றன. உதாரணமாக அன்னப் பறவையின் உடல் பகுதியில், காளையின் உடல் பகுதியில் செடி நடுவது போன்ற வடிவைப்பில் கிடைக்கின்றன. பூந்தொட்டியின் தொடக்க விலை ரூ. 150.

வீட்டு வரவேற்பறையை அழகுபடுத்த ஏராளமான சுடுமண் சிற்பங்கள் இருக்கின்றன. யானைச் சிற்பங்கள், குதிரைச் சிற்பங்கள் அவற்றை வைப்பதற்கான சிறிய யானை முகம் கொண்ட ஸ்டூல் எனப் பல வகையான பொருட்கள் இருக்கின்றன. இது மட்டுமல்லாது புத்தர், காந்தி போன்ற மகான்களின் சிலைகளும் கிடைக்கின்றன. சிலைகளின் தொடக்க விலை ரூ.1000.

சுவரில் மாட்டுவதற்கென்று ஓவியம் போன்ற புடைப்பு மண் சிற்பங்களும் கிடைக்கின்றன. சூரியக் கடவுளின் சுவர் சிற்பங்களும் பழங்குடி மனிதர்களின் முக அமைப்பைக் கொண்ட சுவர் சிற்பங்களும் இவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை. இதன் தொடக்க விலை ரூ.100.

இவை அல்லாது துளசி மாடம் கிடைக்கிறது. மிகச் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு என வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களில் துளசி மாடம் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x