Last Updated : 17 Feb, 2018 10:44 AM

 

Published : 17 Feb 2018 10:44 AM
Last Updated : 17 Feb 2018 10:44 AM

மோட்டார் பழுது பார்க்க ஒரு செயலி

ன்னதான் நவீன வசதிகளுடன் வீட்டைக் கட்டினாலும் மோட்டார் பழுதாகிவிட்டால் பழுதுநீக்குபவரை வரவழைப்பது சாதாரண வேலையில்லை. இது போன்ற சேவைத் துறைகளில் ஈடுபடும் பொறியாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் பழுதைச் சரிசெய்ய உடனடியாக ஆட்கள் கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட மோட்டார் நிறுவனத்தின் சேவை மையத்திலிருந்தே ஆட்களை அழைக்கலாம் என்றாலும் சாதாரணமாக இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும்.

பல வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இதற்கென்றே தனியாகப் பணியாளர்கள் இருப்பார்கள், அல்லது பழுதை உடனடியாகச் சரிசெய்வதற்குப் பெரிய சேவை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பார்கள். அதனால் மோட்டார் பழுது என்ற அவஸ்தையை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருப்பவர்கள் சந்திப்பதில்லை என்று சொல்லலாம்.

ஆனால், தனி வீடுகள், நான்கு அல்லது ஐந்து வீடுகள் கொண்ட சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், கிராமப்புறங்களில் மோட்டார் பழுதால் ஏற்படும் அவஸ்தை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

மோட்டார் உருவாக்கத்தில் பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் சேவைத் தொழில்நுட்பங்களில் இந்தத் தேவைக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதுதான் இப்போதுவரை பல நிறுவனங்களிலும் நடைமுறை. இதில் முதல் முறையாக கிரண்ட்போஸ் பம்ப் நிறுவனம் செயலி மூலமான சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மோட்டார் பழுதுபார்ப்பில் புதிய முயற்சியை எடுத்துள்ளது.

மோட்டார் பழுது எனில் அதைச் சரிசெய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோட்டார் பழுது நீக்குவதற்கு இரண்டு நாட்கள் முதல் மூன்று நாட்கள்வரை எடுக்கப்படுகிறது. இது நகர்ப்புறக் கணக்கு. கிராமப்புறங்கள் எனில் இன்னும் கூடுதல் நாள் ஆகும்.

மோட்டார் பழுது எனில் சாதாரணமாக அனைவரும் செய்வது தொலைபேசி மூலம் மையப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் தகவல் அளிப்பார்கள். அந்தத் தகவல் வாடிக்கையாளருக்கு அருகில் உள்ள சேவை மையத்துக்கு அனுப்பப்படும். அங்கிருந்து வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு என்ன பிரச்சினை எனக் கேட்டு, அதற்கு ஏற்பப் பணியாளர்களை அனுப்புவார்கள்.

சேவையின் முடிவில் வாடிக்கையாளரின் அனுபவம் குறித்த கருத்து நேரடியாக நிறுவனங்களுக்குக் கிடைக்காது. ஒருவேளை தாமதமாகச் சரி செய்யப்படுகிறது என்றால் அதற்கான உண்மையான காரணம் என்ன என்பதும் தெரியாமல் போகும்.

ஆனால், இந்தச் செயலி முறையில் வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட்போன் மூலம் பழுதான மோட்டார் பம்பின் பாகம் அல்லது மோட்டார் பம்பை போட்டோ எடுத்துச் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ததும் தானாகவே வாடிக்கையாளர் எந்தப் பகுதியிலிருந்து சேவையைக் கோருகிறார் என்று மேப் மூலம் அடையாளம் காணப்படும். அதற்கு ஏற்ப அவருக்கு அருகில் உள்ள சேவை மையத்தினருக்குத் தகவல் கொடுக்கப்படும்.

அங்கிருந்து வாடிக்கையாளருக்குச் செயலி மூலம் பதில் அனுப்பப்படும். இந்தச் செயலி வழியாக வாடிக்கையாளர் சேவை கோரியது, சேவை முகவர்கள் அனுப்பிய பதில், எத்தனை மணி நேரத்தில் அது சரிசெய்யப்பட்டுள்ளது ஆகிய எல்லா விவரங்களும் தெரிந்துவிடும்.

நிறுவன அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சேவை மையம், சேவைப் பொறியாளர், வாடிக்கையாளர் என அனைவரும் செயலியின் நடவடிக்கைகளுக்குள் ஒருங்கிணைக்கப்படுவதால் விரைவாக மோட்டார் சரிசெய்யப்படும். வேலை எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதையும் டிராக் செய்துகொள்ளலாம்.

வாடிக்கையாளர் தனது அனுபவத்தைப் பதிவுசெய்வதன் மூலம் எங்களது வேலையின் தரமும் உறுதி செய்யப்படுகிறது. இந்த வகையில் மோட்டார் பழுது நான்கு முதல் எட்டு மணி நேரத்துக்குள் சரிசெய்யப்படும் என்கிறார்கள் நிறுவனத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x