Last Updated : 16 Aug, 2014 02:13 PM

 

Published : 16 Aug 2014 02:13 PM
Last Updated : 16 Aug 2014 02:13 PM

உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?

தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் ஃபேன் சுற்றும், லைட் எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாகக் கேட்கிறோம்.

ஆனால் மின்னாற்றலைச் சேமிப்பது நமக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே நல்லது. தமிழகம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க திணறும் நேரத்தில் நாம் சேமிக்கும் சிறு துளி மின்சாரமும் பெரிய வெளிச்சத்தைத் தரும்.

நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம். ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன், வாட்டர் பம்பு ஆகியவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்த முடியும்.

மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரணமான கார் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்.

பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் 12 சதவீதம் ப்ரிட்ஜுக்கும், 20 சதவீதம் ஏசிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் கீசருக்கும், 28 சதவீதம் பிறவற்றுக்கும் செலவாகிறது. வீட்டில் மின்சாரம் பலவகைகளில் அனாவசியமாகச் செலவாகிறது.

ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும் ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும் எனவே இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டின் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் ஏசிக்கு ஆவதால் ஏசியின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் ஏசி இயங்க வழிசெய்ய வேண்டும். வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ ஏசி அறையில் வைக்கக் கூடாது.

ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும். வீட்டைக் கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலமும் வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.

அடுத்து விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. எனவே தேவையில்லாத சமயங்களில் மின் விளக்குகளை ஒளிர விடுதலைத் தவிர்க்க வேண்டும். குண்டு பல்புகள் எனச் சொல்லப்படும் டங்க்ஸ்டன் பல்புகளைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் புறத்தில் இரவுகளில் மட்டும் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். வெளிச்சம் தேவைப்படாதபோது அவற்றை அணைத்துவிடுதல் நல்லது.

பிரிட்ஜ்களின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் செலவாகிறது. எனவே ப்ரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான குளிர் நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் ப்ரிட்ஜை அடிக்கடி மூடித்திறப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை ப்ரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

ப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் ப்ரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவுப் பதார்த்தங்களை 36-40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும், ஃப்ரீஸரை 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலும் வைத்துப் பராமரிப்பது நல்லது. ப்ரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம்பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும்.

மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். மின் சாதனங்களை முறையாகக் கையாண்டால் மின் ஆற்றலை சரியான விதத்தில் சிக்கனமாகச் செலவழித்து மின் ஆற்றல் சேமிப்புக்கு நம்மால் ஆன அளவில் உதவ முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x