Published : 27 Jan 2018 10:07 AM
Last Updated : 27 Jan 2018 10:07 AM

இறக்குமதி மணலுக்கு ஏன் கட்டுப்பாடுகள்?

ணல் குவாரிகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தமிழகத்தில் தொடர்ச்சியாக மணல் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் கட்டுமான நிறுவனங்களின் பணிகள் முடங்கியுள்ளன. மணலுக்கு மாற்றாக ‘எம் சாண்ட்’ என அழைக்கப்படும் குவாரி மண்ணைப் பயன்படுத்தலாம். ஆனால், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை என்பதால் கட்டுமானப் பணிகளில் இது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் கட்டுமானத் துறை தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் வேலை இழந்து நிற்கின்றனர். திட்டமிட்டபடி கட்டிடங்களை முடிக்க முடியாததால் கட்டுமான நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த எம் ஆர் எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மலேசியாவிலிருந்து 54 ஆயிரம் டன் மணலைத் தமிழகத்துக்கு இறக்குமதி செய்தது. தமிழகத்தைவிடக் குறைந்தவிலையில் இந்த மணல் அங்கு கிடைக்கிறது. இறக்குமதிக்குப் பின்னரும் தமிழக மணல் விலையைவிடக் குறைந்த விலைக்கு அளிக்க முடியும் என்பதால் இந்த முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

முறையான ஆவணங்களுடன் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இந்த மணல் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள அந்த மணலுக்கு 2 கோடியே 88 லட்சம் சுங்க வரி செலுத்தியுள்ளனர். தவிர ஜிஎஸ்டி-யாக 38 லட்சமும் செலுத்தியுள்ளது அந்த நிறுவனம்.

ஆரம்பத்தில் 1,000 டன் மணல் வரை கேரளத்துக்கும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் கொண்டுசென்ற நிலையில் திடீரென மாவட்ட நிர்வாகமும் கனிமவளத் துறையினரும் இறக்குமதி மணலைத் துறைமுகத்தில் இருந்து வெளியேவிடாமல் தடுத்துள்ளனர்.

இந்த இறக்குமதி மணலை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டி அந்த நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் இறக்குமதி மணலை வெளியே எடுக்க அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. ஆனால், அரசு அதிகாரிகள் மேல் முறையீடு செய்துள்ளதால் 54 ஆயிரம் டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கியுள்ளது.

கனிம வளத்துறை அதிகாரிகள், மலேசிய மணல் தரமில்லாதது.இதனால் கட்டிடங்களின் உறுதித்தன்மை இருக்காது என்று கூறியுள்ளனர். மேலும் தங்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் எம். ஆர். எம். ராமையா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா கூறும்போது, “மலேசியாவில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தி வருவதுடன் அங்கு பல சோதனைகளுக்கு பிறகுதான் மணல் ஏற்றுமதிக்கு அனுமதிக்கின்றனர். பல கட்டுமான நிறுவனங்கள் தரத்தைச் சோதித்த பின்னர்தான் விற்பனை ஆணை கொடுத்தனர். நாங்களும் பல்வேறு தரச் சோதனைகளில் இந்த மணல் கட்டுமானத்துக்குத் தரமானதுதான் என்று சான்றிதழ் பெற்றுள்ளோம்’’ என்கிறார்.

“தூத்துக்குடி துறைமுகத்தில், மரம், காப்பர், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் வந்து இறங்குகின்றன. முறையான அனுமதி, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும்போது மணலுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்? இதே காலத்தில் கேரளத்துக்கு மூன்று கப்பல் மணல் கொண்டுபோகப்பட்டுள்ளது. அந்த மாநில அரசு சோதனைக்குப் பின்னர் அனுமதி அளித்துள்ளது.

இந்த மணலை அரசே எடுத்து விநியோகம் செய்வதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இறக்குமதி ஆன செலவுகளை அளித்தால் அதை அரசுக்கு அளிக்கவும் தயாராக உள்ளோம். ஆனால், மணலைத் துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்க முடியாததால், அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அதற்கான வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் எங்களுக்குப் பல வகையிலும் நஷ்டம்” என்று தெரிவித்தார்.

“வெளிநாடுகளில் இருந்து ஆற்றுமணலை இறக்கி தமிழகத்துக்குக் கொண்டுவரப் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. தமிழக அரசு அனுமதித்தால் தற்போது உள்ள மணல் தட்டுப்பாட்டைப் போக்கி அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் மணல் சப்ளை செய்ய முடியும். இதன் மூலம் தமிழக ஆறுகள் காப்பாற்றப்படும்” என்று மணலைத் துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டுவர ஒப்பந்தம் எடுத்துள்ள ஜானகி டிரேடர்ஸ் நிர்வாக இயக்குநர் சிதம்பரம் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மணல் இறக்குமதி தொடர்பாக அரசு பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் மணலைத் தமிழகப் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களே விநியோகம் செய்வார்கள். விலையையும் தீர்மானிப்பார்கள் என அறிவித்துள்ளது. தரமில்லாத மணலை நிராகரிக்கவும் வழிகாட்டுதல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, புதுக்கோட்டை நிறுவனம் இறக்குமதி செய்த மணல் துறைமுகத்தில் முடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆனால், புதிய உத்தரவுக்குப் பின்னர்தான் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கிரேட்டன் ஈகிள் என்ற கப்பல் மூலம் 58 ஆயிரம் டன் மணலை மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டுவந்தது. புதிய வழிகாட்டுதல்கள்படி அந்த மணலைத் தமிழக அரசே கொள்முதல் செய்திருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அந்த நிறுவனம் மணல் கொண்டுவந்த கப்பலை கர்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்துக்குக் கொண்டுசென்றது.

இறக்குமதி செய்யப்படும் மணல் விநியோகத்தை அரசே ஏற்று நடத்துவது முறையா என்பதைத் தாண்டி, நேரடியாக அரசே இறக்குமதி செய்துகொள்ளலாமே எதற்கு இறக்குமதியாளர்களிடமிருந்து இடைத்தரகர் வேலையை அரசு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் மணலை ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரித்தால் முதலீட்டுக்கு மோசம் என இந்த முயற்சிகளிலிருந்து அவர்கள் பின்வாங்கி விடுவார்கள். இதனால் தமிழ்நாட்டுக்குத்தான் நஷ்டம் என்கின்றனர்.

இறக்குமதி மணல் தரமாக இருக்கிறது. பல மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர் என்ற நிலையில் தமிழகத்தில் யார் இறக்குமதி செய்தால் என்ன? அல்லது அவற்றை வாங்கி அரசே விநியோகம் செய்வதில் இறக்குமதியாளர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் தொழில் முடங்கிஉள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் கோடிகளில் நஷ்டம் ஏற்படுகிறது என்கின்றன கட்டுமான நிறுவனங்கள்.

தமிழக ஆறுகளும் கனிம வளங்களும் அரசுக்கே தெரியாமல், சட்ட விரோதமாகச் சூறையாடப்படுவதைத் தடுப்பதில் முனைப்பு காட்டாத அதிகாரிகள், முறையான சுங்கவரி செலுத்தி இறக்குமதி செய்யப்படும் மணலை வெளியில் எடுத்துவரத் தடைசெய்வது ஏன் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாக உள்ளது.

கட்டுமானத் தொழிலையும் நிறுவனங்களையும் அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பல லட்சம் பேரின் குடும்பங்களும் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மலேசியாவிலிருந்து ஆற்று மணலை இறக்குமதிசெய்வதில் நிலவும் குழப்பமான சூழலுக்கு அரசு முடிவு காண வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x