Last Updated : 02 Dec, 2017 10:59 AM

 

Published : 02 Dec 2017 10:59 AM
Last Updated : 02 Dec 2017 10:59 AM

இறக்குமதி மணல் லாபமா?

 

ணல் பிரச்சினை மீண்டும் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. எம்.ஆர்.எம். ராமைய்யா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட உத்தரவிட்டுள்ளது. அந்நிறுவனம் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டுசெல்லும் வழியில் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மாவட்ட அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில்தான் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த முக்கியத்துவம் மிக்கத் தீர்ப்பைக் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மணல் குவாரிகள் தனியார் வசம் இருந்தன. அப்போது லாப நோக்கத்தில் அடிக்கடி செயற்கையான மணல் தட்டுப்பாடு உருவாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மணல் தோண்டியெடுக்கபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து அரசே குவாரிகளை ஏற்று நடத்தத் தொடங்கியது. அப்படியும் மணல் தட்டுப்பாடு நீடித்தது. குவாரிகளை அரசு அதிகப்படுத்தியது.

சிறில் சிறில் கிறிஸ்துராஜ்right

மணலுக்காக வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக ஆன்லைன் மணல் விற்பனையும் அறிமுகப்படுத்தப்பட்டது. எம்-சாண்ட் எனப்படும் மாற்று மணலைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் மணல் தட்டுப்பாடு கட்டுமானத் தொழிலை முடக்கும் அளவுக்குத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கட்டுமானத் தொழிலை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

“இந்தத் தீர்ப்பில் இரு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று இறக்குமதி மணலுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இவற்றில் இறக்குமதி மணலுக்கான அனுமதி ஏற்றுக்கொள்ளக்கூடியது. நமது கட்டுமானப் பணிகளுக்கு இங்கு கிடைக்கும் மணல் போதாதபட்சத்தில் மணலை இறக்குமதி செய்வதால் தட்டுப்பாடு நீங்கும். மேலும் இறக்குமதி மணல், இங்கு கிடைக்கும் மணலைவிட விலை குறைவானது. தீர்ப்பில் கூறியுள்ளதுபடி அரசே மணலை இறக்குமதி செய்ய வேண்டும். உரிய நிபுணர்களைக்கொண்டு மணலின் தரத்தையும் சோதிக்க வேண்டும்” என்கிறார் கிரடாய் தமிழ்நாடு முன்னாள் தலைவர் நவீன் குமார்.

இங்குள்ள மணல் தட்டுப்பாடு காரணமாக சில ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளிலிருந்து மணலை இறக்குமதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தேசியக் கட்டுமானச் சங்கம் தொடர்ந்து எழுப்பிவருகிறது. அதற்கான முதல் முயற்சியையும் ஜூன் மாதம் தொடங்கியது. சில முகமை அமைப்புகளின் மூலம் மலேசியா, கம்போடியா நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்ய முடிவெடுக்கப்பட்டது.

“இப்போதுள்ள கட்டுமானத் தேவைக்கு ஏற்ப மணல் இங்கு இல்லை. அதனால் எம்-சாண்ட் அல்லது இறக்குமதி மணலைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது. அதனால் இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது” என்கிறார் கட்டுமானச் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினரான ஐடியல் சிறில் கிறிஸ்துராஜ்.

அதே நேரம் மணல் தட்டுப்பாடு நீடித்துக்கொண்டிருக்கும் இந்தச் வேலையில் குவாரிகளை மூட வேண்டும் என்பது கட்டுமானத் தொழிலைப் பாதிக்கக்கூடியது என்கிறார் நவீன் குமார். “குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும்தான் இப்போது அரசு மணல் குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. இதைப் பரவலாக்கி குவாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது. ஒரே இடத்தில் மணலை எடுப்பதால்தான் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். மணலை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவும் அதிகமாகும்.

குவாரிகளை அதிகப்படுத்தினால் ஆற்று மணல் விலை குறையவும் வாய்ப்புள்ளது. ஆழ உழுவதைவிட அகல உழுவதே சிறந்தது. 7/8 இடங்களில் 30 அடி தோண்டி சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செய்வதைக்காட்டிலும் 70/100 இடங்களில் 3 அடிக்கும் குறைவாகவே மணலெடுத்து மணல் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தாமல் காப்பாற்றலாம்” என்கிறார் அவர்.

ஆனால் கேரள, கர்நாடக அரசுகள் மணலை அள்ளத் தடைவிதித்துள்ளன. அம்மாநிலங்களின் கட்டுமானத் தேவை இறக்குமதி மணல் மூலமும் எம்-சாண்ட் மணல் மூலமும்தான் தீர்க்கப்படுகிறது. தமிழக அரசும் எம்-சாண்ட் மணலைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்திவருகிறது. தமிழக அரசின் பொதுப் பணித்துறை பணிகளுக்கு எம்-சாண்ட்தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் எம்-சாண்ட் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

“மணலுக்குத் தட்டுப்பாடு வந்ததிலிருந்து நாங்கள் எம்-சாண்டைத்தான் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தி வருகிறோம். ஆற்று மணலைப் போலத் தரமானதாகத்தான் இருக்கிறது. ஆனால் எம்-சாண்டும் இயற்கையாகக் கிடைக்கும் கற்களை உடைத்து உருவாக்கப்படுபவதுதான்” என்கிறார் சிறில் கிறிஸ்துராஜ்.

01JKR_NAVEENநவீன் குமார்

இந்நிலையில் மலேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் உள்ள மிதமிஞ்சிய மணல் வளம் தமிழகக் கட்டுமானத் துறைக்கான மணல் தேவையை நிரந்தரமாகத் தீர்க்கக்கூடியதாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இறக்குமதிசெய்யப்படும் மணலின் விலை, இங்கு குவாரிகள் மூலம் கிடைக்கும் மணலைவிடக் குறைவானது. உள்நாட்டு மணல் ஒரு க்யூபிக் அடிக்கு 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆனால் இறக்குமதி மணல், அங்குள்ள போக்குவரத்துச் செலவு, ஏற்றுமதிக் கட்டணம், கப்பல் போக்குவரத்துச் செலவு, இறக்குமதிக் கட்டணம், இங்குள்ள இறக்குமதிச் செலவு எல்லாம் உள்பட ஒரு க்யூபிக் அடிக்கு ரூ.90-க்கு கிடைக்கிறது.

இந்தியக் கட்டுமானத் தொழிலில் முதலிடம் வகிக்கும் மும்பை ஏற்கெனவே கட்டுமானத் தொழிலுக்கான மணல் தேவையை இறக்குமதி மணல் மூலம்தான் ஈடுசெய்துவருகிறது.

இந்த இறக்குமதி மணல் விற்பனையின் மூலம் இங்குள்ள மணல் குவாரிகள் குறைய வாய்ப்புள்ளது. அதைவிட முக்கியமாக இங்குள்ள மணல் வளம் பாதுகாக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x