Last Updated : 26 Jul, 2014 03:56 PM

 

Published : 26 Jul 2014 03:56 PM
Last Updated : 26 Jul 2014 03:56 PM

அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுகாப்பானவையா?

சென்னை போன்ற பெருநகரங்களைப் பொறுத்தவரை வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அனைவருக்கும் வீடு வசதியைத் தர அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் ஏற்றவை.

ஆனால் நடந்து முடிந்த மவுலிவாக்கம் கட்டிட விபத்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் குறித்த பயத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. விபத்து நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதும் அதன் அதிர்வுகள் பலவிதங்களில் இன்னும் மக்களிடையே எதிரொலித்துக் கொண்டுதான் உள்ளன.

கட்டுமான நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பொருட்களின் விலை ஊசலாட்டம், ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை ஆகிய காரணங்களால் தேக்கம் அடைந்த நிலையில் உள்ள கட்டுமானத் துறைக்கு இந்த விபத்து ஒரு பெரிய அடி.

இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பாதுகாப்பு குறித்த பயம் மக்களிடையே பரவிவருகிறது. இதனால் மக்களின் உணர்வை அறியும் பொருட்டு நகர் முழுவதும் ஒரு ஆய்வை இந்திய பிராபர்டி டாட் காம் நடத்தியது.

ரியல் எஸ்டேட் ஆய்வு

இந்த ஆய்வின் முடிவுகள் கட்டுமான நிறுவனங்களும் அரசும் பின்பற்ற வேண்டிய கடமைகளைக் கூறுகின்றன. இந்த முடிவுகளைப் பாடமாக எடுத்துக்கொண்டு கட்டுமான நிறுவனங்கள் செயற்பட்டால் கட்டுமானத் துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்து எறிய முடியும்.

ஆய்வு முடிவுகள்

வீடு வாங்க நினைப்பவர்களின் 59 சதவீதமானோர், தனித்து இயங்கும் ஒரு அமைப்பு கட்டுமானப் பணிகளை ஒழுங்குசெய்தால்தான் இம்மாதிரியான விபத்துகள் தடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

43 சதவீதமானோர் அரசுதான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட கட்டுமானத் திட்டத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் கட்டப்படுகிறதா எனப் பார்க்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளனர்.

39 சதவீதத்தினர் கட்டுமான நிறுவனங்கள்தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

22 சதவீதத்தினர் கட்டுமான நிறுவனங்கள் அனுமதித்த திட்டத்தின்படி கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானப் பொறியாளர்களைக் கொண்டு தொடர் சோதனைகளை அரசு நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் 67 சதவிகிதத்தினர் தரமில்லாத கட்டுமானத்தால் தினந்தோறும் பிரச்சினைகளைச் சந்திப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

லஞ்சமும் கட்டுமான நிறுவனங்களின் அதிக லாப நோக்கும்தான் தரமில்லாத கட்டுமானத்திற்கும் விபத்திற்குமான பிரதான காரணங்கள் எனவும் அந்த அறிக்கையின் முடிவு சொல்கிறது.

மேலும், வீடு வாங்க இருப்போரில் பாதிப் பேர் தரக்குறைவான கட்டுமானங்களைச் சிறு கட்டுமான நிறுவனங்கள் மட்டும் தரவில்லை, பெரிய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்கின்றனர். 87 சதவீதத்தினர் ரியல் எஸ்டேட் துறை மீது தங்களுக்கு இருந்த நம்பிக்கை இந்த விபத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x