

பெண் பருவமடைவது இயற்கை யான ஒன்று. இது உடலியல் மாற்றம். ஆண்களுக்கும் இது நிகழும். ஆனால், இந்தச் சமூகம் ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களை மட்டுமே குறிவைத்து இதில் சடங்கு களையும் சம்பிரதாயங்களையும் திணித்தது.
ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே திருமணத்துக்குத் தயாராக இருப்பதாக எண்ணிக்கொண்டு அந்தப் பெண்ணை மணமுடிக்கும் பெற்றோர் இப்போதும் நம்மிடையே உண்டு. பெண் குழந்தைகளுக்கு முதல் மாதச் சுழற்சி உதிரப்போக்கு ஏற்படுவதைப் பேச்சுவழக்கில் நாம் ‘பூப்பெய்துதல்’ எனக் கூறுகிறோம்.
ஒரு செடி பூ பூக்கும் நேரத்தில் அது மகரந்தச் சேர்க்கைக்குத் தயாராவதால் இயற்கையோடு வாழ்ந்த காலத்தில் நாமும் ‘பூப்பெய்துதல்’ என்கிற சொல்வழக்கைப் பயன்படுத்தி இருப்போம் என எண்ணுகிறேன். ஆனால், இந்தச் சொல்வழக்கு மிகத் தவறு. ஒரு பெண்குழந்தை முதல் மாதச் சுழற்சியை அடைந்துவிட்டதாலேயே அவள் திருமணத்துக்குத் தயாராகிவிட்டாள், பிள்ளைகள் பெறத் தயாராகிவிட்டாள் என நினைப்பது முற்றிலும் தவறு.