

பாளம் பாளாமாக வெடித்த பூமியில் தலையில் அடுக்கடுக் கான குடங்களுடன் நடந்து செல்லும் ராஜஸ்தான் / குஜராத் பெண்மணி, இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு மார்பளவு நீரில் தத்தளிக்கும் ஒரு கிராமத்துப் பெண், பல வண்ண காலிக் குடங்களுடன் வெயிலின் உச்சத்தில் நடுத் தெருவில் காத்திருக்கும் பெண்கள், காவிரி நீர் ஊருக்குள் வந்ததும் நீரை விழுந்து வணங்கும் பெண்கள், சின்னஞ்சிறிய அடுப்படியில் புகைக்கு நடுவில் வியர்க்க விறுவிறுக்க நிற்கும் பெண், வெள்ளத்தில் படகில் மீட்கப்படும் கர்ப்பிணி எனப் பல்வேறு ஒளிப்படங்களை நாம் கடந்து வந்திருப்போம்.
இந்த விவரணைகளைப் படித்த உடனே உங்கள் மனதில் லகுவாகச் சித்திரங்கள் எழும், அந்த அளவுக்கு இவை நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. சுற்றுச்சூழல் சீர்குலைவால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள தனித்துவமான பாதிப்புகளைப் பற்றிப் பல தசாப்தங்களாகப் பேசி வருகிறோம். ஆனாலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் தீர்வுகள் இன்னும் நம்மை வந்து அடையவில்லை.