

நாங்கள் கல்லூரி இறுதியாண்டை எட்டிவிட்டோம். கூட்டைப் பிரிந்து பறக்கும் குஞ்சுப்பறவைகள்போலப் பறக்கத் தயாராகிக் கொண்டிருந்த தருணம் அது. அப்போது அந்தக் கூட்டுக்குள் எங்கள் வகுப்பாசிரியர் முனைவர் சு.செல்வகுமாரன் தன் கவிதை நூல் ஒன்றை வெளியிட நினைத்தார்.
அவருடைய அன்பு மாணவர்கள் எங்களின் உதவியோடு (மெய்ப்புத் திருத்தம், அட்டை வடிவமைப்பு, அச்சு, பதிப்பு) அது உருவாக்கம் பெறவேண்டும் என்று நினைத்தார். ஒவ்வொரு கவிதையிலும் அவரின் அனுபவ முதிர்ச்சியின் அடையாளங்களைச் சுமந்த நூல் அது. எங்கள் வகுப்பு மாணவர் முகிலன் வெளியிட, நான் பெற்றுக்கொள்வதாக நூல் வெளியீடு நிகழ்ந்தது. அதுதான் எங்களுக்கு ‘முதல் மரியாதை’.
கல்லூரி இறுதிக் காலம் என்பதால், இல்லை இல்லை ‘இலையுதிர் காலம்’ என்பதால் நாங்கள் எங்கள் ஐயாவின் அறையில் கூடிக் குழுப்படம் எடுத்துக்கொண்டோம். அப்போது ஐயா என்னை அழைத்துத் தனது கையொப்பமிட்டு ஒரு கனமான புத்தகத்தைக் கொடுத்தார். பச்சைக் குழந்தை பணமூட்டையைச் சுமப்பதுபோல் நூலைத் தாங்கி நின்றேன். அட்டையைப் பார்த்தேன், ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்று இருந்தது. அவ்வளவுதான். நாள்பட்ட சர்க்கரை நோயாளியிடம் இன்று முதல் வெல்லம் சாப்பிடலாம் என்று சொன்னதுபோல் எனக்கிருந்தது.