

எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்கும் வழக்கம் உண்டு. அதில் வரும் தொடர்கதையைப் படிப்பதில் எனக்கும் அம்மாவுக்கும் ஏற்படும் போட்டியில் இருந்தே என் வாசிப்பு தொடங்கியது. அந்த நாள்களில் ராஜேஷ்குமார், சுபா போன்றோர் தொடர்கதை மூலம் எனக்கு அறிமுகமாயினர். ‘மண் மூடிய மகத்தான நாகரிகம்’ என்னும் அமுதனின் தொடர் என்னை வரலாற்றின் பக்கம் அழைத்துச் சென்றது.
அந்தத் தொடர் மூலம் தமிழரின் நாகரிகத்தைப் பறைசாற்றும் ஆதிச்சநல்லூர், கீழடி பற்றி அறிய வாய்ப்புக் கிடைத்தது. பிறகு முத்தாலங்குறிச்சி காமராசுவின் ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ நூலைப் படித்தேன். கல்லூரி முதலாம் ஆண்டில் படித்த ஒரு முழுமையான புத்தகம் இது.
கல்லூரி நூலகம் என் வாசிப்புக்குப் பெரிதும் உதவியது. பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. கல்லூரி நாள்களில் ‘வேள்பாரி’ படித்தது அற்புதமான நிகழ்வுகளுள் ஒன்று. கரோனா ஊரடங்குக் காலத்தில் சாரு நிவேதிதாவின் புத்தக அறிமுகம் கிடைக்க அவரது எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
சாருவின் நாவல்களைப் போலவே அவரது கட்டுரை நூல்களும் அருமையானவை. அவரது கட்டுரைகளின் மூலம் நமக்குப் புதிய எழுத்து வகைமைகள், புதிய எழுத்தாளர்கள் போன்றவற்றைப் பற்றி அறிய முடியும் என்பதால் அது சங்கிலித் தொடர் போல வாசிப்புக்கு நம்மை அழைத்துச் செல்லும். சாரு நிவேதிதா கொடுக்கும் குறிப்புகள் அவை சார்ந்து மேலும் பல தகவல்களைத் தேட நம்மை உந்தித்தள்ளும்.
மருதன், முகில் இருவரது எழுத்தும் வரலாற்றை மிகவும் எளிமையாகவும் எளிதிலும் புரிந்துகொள்ள உதவுபவை. என் மகிழ்ச்சி, துக்கம், கவலை என அனைத்திலும் புத்தகங்கள் என்னோடு பயணித்துக்கொண்டே இருக்கின்றன.
- த.ராகேசனா, பால்குளம், தூத்துக்குடி.