

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது, ஒரு குழந்தையைப் பாலியல் திருப்திக்காக வயது முதிர்ந்த நபர் அல்லது அதிகாரச் செல்வாக்கைக் கொண்ட ஒருவர் பாலியல்ரீதியாகச் சுரண்டுவது.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளச் சட்டம், மருத்துவம், கல்வி, ஊடகம், சமூக நலன் உள்ளிட்ட பல துறைகளில் நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது.
குழந்தைத் திருமணம், இளவயதுக் கர்ப்பம் போன்ற நிகழ்வுகளை அதிகார பூர்வத் தரவுகளின் மூலம் கண்டறிய முடிந்தாலும், குழந்தை மீதான பெரும்பாலான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகாமல் மறைந்துவிடுகின்றன.
சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் சுமார் 90% குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்களாலேயே நடைபெறுகின்றன. இருப்பினும், ‘இது எப்போதும் நடக்கக்கூடிய விஷயம்தான்; நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்கிற சமூக மனப்போக்கு இந்த வன்முறையை இயல்பாக்குகிறது.
இதனால், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தனிநபரின் செயலாக மட்டும் பார்க்காமல், சமூகத்தின் கூட்டுப் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்தக் கூட்டுப் பொறுப்புணர்வு என்பது சட்ட அமைப்புகள் மட்டுமல்லாமல், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிகள், சமூக அமைப்புகள், குழந்தைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பெரியவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் குறிக்கிறது. ஆனால், நடைமுறையில் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும் அனுபவம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
பாலியல் வன்முறையைத் தடுப்பதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட ஆடைகளை அணியாதே, வெளியே தனியாகச் செல்லாதே, இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளே குழந்தைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகின்றன.
இதனால், வன்முறையை நிகழ்த்திய நபரின் பொறுப்பு பேசப்படாமல், குழந்தையின் நடத்தையோ உடையோ கவனத்தின் மையமாகின்றன. இந்த முரண்பாட்டால் குழந்தைகள் குழப்பமடைகிறார்கள். தவறு தன்னிடமா அல்லது தன்னைத் துன்புறுத்திய நபரிடமா என்கிற கேள்வி அவர்களுக்குள் உருவாகிறது.