

ஆணுக்கு ஒரு கடமை என்றால், பெண்ணுக்கோ ஆயிரமாயிரம். சதா எதிர்மறைச் செய்திகளும் நிகழ்வுகளும் சூழ வாழும் இந்நாளில் அவரவருக்கு என அமைத்துக்கொண்டுள்ள வெளிகளில் மனதைத் திருப்பி இளைப்பாறி, மெதுவாக நேர்மறை எண்ணங்களை நோக்கி நகர்வதை எது தடுக்கிறது?
குழந்தைகளைக் கவனித்தல், பதின்பருவத்தில் உள்ளோரைக் கூர்ந்து நோக்குதல், கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகளைக் கருத்தோடு வளர்த்தல், வீட்டில் உள்ள பெரியோரை அரவணைத்துச் செல்லுதல் எனச் சுற்றி உள்ள சகலரையும் பாதுகாத்து வழிநடத்திச் செல்லும்படி வீட்டில் உள்ள பெண்களை நோக்கியே அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்படும். நம்மைச் சுற்றிலும் இதுபோன்ற காட்சிகள் நடப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிருப்போம்.
அந்தப் பெண்ணுக்கு எத்தனை வயதானாலும், எத்தகைய வேலையில் அவள் மூழ்கி இருந்தாலும், குடும்பம் என வரும்போது வீட்டில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரின் உடல் நலம், மன நலத்துக்கு முழுப் பொறுப்பு உடையவளாக அந்தப் பெண்ணைத்தான் இந்தச் சமூகம் கருதுகிறது. சின்னதாக இடறினாலும், ‘வளர்ப்பு சரியில்லை’ என்பதில் தொடங்கி, ‘வீட்டில் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்காங்க’ எனச் சொல்வதுவரை யாராவது பெண்ணைக் குறைகூறிக் கொண்டே இருப்பார்கள்.