

பிரச்சினைகளை அவை தலைதூக்கும்போதே இனம்கண்டு கொள்வதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொள்வது நல்லது. அதை எப்படிப் பழக்கிக்கொள்வது எனக் கேட்டால் ரொம்ப சுலபம். நாம் செய்யும் எந்தவொரு காரியத்தையும் சொல்லும் வார்த்தையையும் இதைச் செய்கிறோம், இதைச் சொல்கிறோம் என்கிற விழிப்புணர்வோடு செயலாற்றினாலே தவறு எங்கே என்று நமக்குப் பிடிபட்டுவிடும்.
ஏதோ தவறாக இருக்கிறது என்பது நமக்கே தெரிய வேண்டும். அப்படித் தெரியவில்லை என்றால் விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும்போது கேட்டு, புரிந்துகொள்ள வேண்டும். இதற்கோர் எடுத்துக்காட்டைக் குறிப்பிடலாம். இரும்புக் கம்பியில் துணி உலர்த்தும்போது அதன் கூர்மைப் பகுதி கையைக் கிழித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். துரு பிடித்த கம்பி கையைக் கிழித்தால் நாளைக்குச் சீழ் கோத்துக்கொண்டு விரலுக்கே ஆபத்தாக முடியலாம் என்கிற பிரக்ஞை நமக்கு வேண்டும்.
அடிபட்ட இடத்தைக் கழுவிவிட்டு ஆன்ட்டிசெப்டிக் போட்டுவிட்டு, மருத்துவரிடம் சென்று டிடி ஊசியும் போட்டுக்கொள்வது அறிவுள்ளவர் செய்யும் காரியம். இதைச் செய்யவில்லையென்றால் அந்தக் காயம் நம் கையைப் பாதித்து விரல் செப்டிக் ஆகி அந்த விரலையே எடுத்துவிடக்கூடிய நிலை ஏற்படலாம்.