

வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏன் ஏற்படுகின்றன? நம்மிடையே கருத்து ஒற்றுமை இல்லாமல் இருப்பதால், நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நடப்பதால், நம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றத்தால் என்று பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். முரண்பாடுகள் நம்மைப் பிரச்சினைக்கு இட்டுச் செல்வது இயற்கையே. அப்படி எழும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண வேண்டுமென்றால் முதலில் அந்தக் குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரச்சினை தெளிவாகப் புரிந்த பிறகு அதற்கு என்ன தீர்வு இருக்கிறது என்று யோசித்துச் செயல்பட வேண்டும். ஒருவேளை அந்தக் குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு எதுவும் புலப்படவில்லையென்றால் அந்தப் பிரச்சினையோடு வாழப் பழகுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். முரண்பட்டுக்கொண்டு நிற்பது எந்த விதத்திலும் உதவாது.
சுருக்கமாக இருக்கிற துணியின் மீது லேசாகத் தண்ணீர் தெளித்து அயர்ன் செய்கிறபோது சுருக்கங்கள் எல்லாம் மறைந்து துணி வழுவழுவென்று ஆகிவிடுவதைப் போலப் பிரச்சினைகளை இனம் காண, கச்சிதமாகப் புரிந்துகொள்ள, தேவையான தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க, நினைத்தது நடக்கவில்லை என்றால் அந்தப் பிரச்சினையை ஏற்க, அந்தப் பிரச்சினையோடு வாழக் கற்றுக்கொண்டுவிட்டால் வாழ்க்கையும் அயர்ன் செய்த துணியைப் போல வழவழப்பாக ஆகிவிடும்.