

எனக்குத் தெரிந்த ஒரு பெண் மணி இந்தத் தொடரைப் படித்துவிட்டு என்னிடம் பேசினார். அவருடைய பெயரை சாரதா என்று வைத்துக்கொள்வோம். “பிரச்சினையைத் தீர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் அல்லது அதனுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று நீங்கள் எளிதாகச் சொல்லிவிடுகிறீர்கள். ஆனால், என் பிரச்சினையைப் பற்றி நீங்கள் பேசவே இல்லை. அது உங்களுக்குப் புரியவும் புரியாது” என்று வருத்தப்பட்டுச் சொன்னார்.
சாரதாவுக்கு 65 வயதிருக்கும். அவருக்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. வசதிபடைத்தவர், மிகப் பெரிய வீடு இருக்கிறது. வேலை செய்ய எட்டு ஆள்கள் இருக்கின்றனர். நான்கு பீரோ நிறைய புடவை. வைரமும் தங்கமுமாக நகைக்கும் குறைவில்லை. வாழ்க்கையில் பரிபூரணமாக அனைத்து வசதிகளும் இருந்தும்கூட சாரதாவுக்கு என்ன குறை? சொல்கிறேன்.
சாரதாவுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகள் மூலமாக ஒரு பேரனும் ஒரு பேத்தியும் இருக்கிறார்கள். மகன் வழியில் மூன்று பேத்திகள். சாரதா தன் வீட்டுக்கு வரும் அனைவரிடமும் அழுது, மாய்ந்து, அரற்றும் குறை என்ன தெரியுமா? கேட்டால் சிலர் சிரிக்கலாம். சிலர் ஆச்சரியப்படலாம். இன்னும் சிலர் கோபப்படலாம். இவ்வளவு சொத்துக்கு வாரிசான தன் மகனுக்கு ஒரு மகன், அதாவது மகன் வயிற்றுப் பேரன் இல்லையே என்பதுதான் அவரது குறை.
15 ஆண்டுகளுக்கு முன் அவரை முதன்முதலில் சந்தித்தபோது, “எனக்கு நெய்ப் பந்தம் பிடித்து என்னைச் சொர்க்கத்துக்கு அனுப்ப பேரனே இல்லை” என்று அழுதார். ஏதோ வேதனையில் சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். ஆனால் அவரை எப்போது சந்தித்தாலும், “என்னுடைய ஒரே மகனுக்கு மூன்றுமே பெண் குழந்தைகளை அந்தக் கடவுள் கொடுத்துவிட்டாரே... ஒரு மகன் இல்லையே” என்று மொளுமொளுவென்று அழுவார்.