

கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரைப் படித்துவரும் சிலர் என்னிடம், ‘நல்ல விஷயங் களைத்தான் நீங்கள் எடுத்துச் சொல் கிறீர்கள். ஆனால், கத்தி மேல் நடப்பது போன்ற விஷயங்களைக் கையாள் கிறீர்கள்’ என்றனர். உண்மைதான். நான் கடவுள் மறுப்பாளர் அல்ல. கடவுள் இல்லை என எப்போதும் வாதிட மாட்டேன். அதேபோல எவருடைய வருமானத்தையோ தொழிலையோ கெடுப்பதற்காகவும் இந்தச் சிந்தனைகளை உங்கள் முன் வைக்கவில்லை.
ஒரு செடி அல்லது மரம் நன்றாகக் காய்க்க வேண்டுமென்றால், வேண்டாத கிளைகளை வெட்டிவிட்டால் முழு பலனும் வரப்போகும் காய்களுக்கோ கனிகளுக்கோ கிட்டும். நம்முடைய வளர்ச்சிக்குத் தடங்கலாக இருக்கும் சில நம்பிக்கைகளை, நம்மை முடக்கும் நம்பிக்கைகளை வேண்டாத கிளையைக் கழிப்பதுபோலக் கழித்துவிட்டால் நம்முடைய சிந்தனையும் வாழ்க்கையும் வளமாக ஆரோக்கியமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இந்தச் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொண்டு வருகிறேன்.