

மனதுக்கு இதம் தரும் கவுன்சலிங்கைப் பற்றி நிறைய பேருக்குத் தவறான புரிதலே இருக்கிறது. மூளைச் செயல்பாட்டில் பிரச்சினை இருக்கிறவர்கள், மனப் பிரமை உடையவர்கள், மன நோய் உள்ளவர்கள் மட்டும்தான் கவுன்சலிங் எனப்படும் மனநல ஆலோசனைக்குச் செல்வார்கள் என்கிற கருத்து முன்பு பலரிடம் இருந்தது. இன்று கொஞ்சம் கொஞ்சமாக அது மாறி, விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது ஆரோக்கியமான விஷயம்.
ஏற்கெனவே முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் 40 – 50 ஆண்டுகளுக்கு முன் கூட்டுக் குடும்பங்களில் வீட்டுப் பெரியவர்கள் அவர்களுக்குத் தெரிந்த விதத்தில் அனுசரணையாக, ஆறுதலாகப் பேசியதால் அன்றைக்கு மனநல ஆலோசகர்களின் தேவை அதிகம் இல்லாமல் இருந்தது. இன்று நிலை மாறிவிட்டது. வீட்டில் எல்லாரும் வேலைக்கும் படிப்புக்கும் வெளியே செல்வதால் ஆளுக்கொரு சாவி வைத்திருக்கிறார்கள். பள்ளியோ கல்லூரியோ முடிந்து வீடு திரும்புகிற குழந்தைகள் அவர்களாக ஏதாவது செய்து சாப்பிட்டு, கம்ப்யூட்டர் பார்ப்பது, டிவி பார்ப்பது அல்லது படிப்பது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.