

மூன்று வகையான பிரச்சினை களில் இயற்கையாகத் தோன்றும் முதல் வகை பிரச்சினை குறித்துக் கடந்த வாரம் பார்த்தோம். தவிர்க்க முடியாத இழப்புகள், இயற்கைச் சீற்றங்கள், எதிர்பாராத விபத்துகள் இவற்றின் மூலமாகப் பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றோடு முரண்பட்டுக்கொள்ளக் கூடாது என்றும் பார்த்தோம். மீண்டும் இந்த வாரமும் நான் இதே விஷயத்தையே எடுத்துக்கொண்டு பேசுவதற்குக் காரணம் இருக்கிறது.
“இயற்கை தரும் பிரச்சினைகள் ஒருவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையலாம் என்று கூறுகிறீர்களே இது எத்தனை பேர் வாழ்க்கையில் சாத்தியமாகும்? பணம், மனித உதவிகள், இதர வசதிகள் இருந்தாலே ஒழிய மீண்டு வருவது என்பது எளிதில் நடக்கும் விஷயம் அல்ல” என்று சென்ற வாரம் வந்த கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு வாசகி என்னிடம் சற்றுக் கோபமாகவே கேட்டார்.
அந்தக் கேள்வியில் இருந்த சினத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தன்னம்பிக்கையை இழந்து எதிர்காலத்தை மண்மேடாக்கிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வசதி, வாய்ப்புகள் இருந்தால் பெரிய உதவிதான். அவை இல்லாவிட்டாலும் சாதிக்க முடியும் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளை என்னால் கூற முடியும்.