

பிரச்சினைகள் மூன்று வகைப்படும் என்று அறிஞர்கள் சொல்லியிருக் கிறார்கள். ஒன்று, இயற்கையாகத் தோன்றுவது. இரண்டாவது, நாமாக உண்டாக்கிக்கொள்பவை. மூன்றாவது பிரச்சினையே இல்லாதபோது பிரச்சினை இருப்பதாக எண்ணி நாம் அவஸ்தைபடுவது. எவையெல்லாம் இயற்கையாக உண்டாகும் பிரச்சினைகள்? சொல்கிறேன். இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், அகால மரணங்கள், பொருளாதாரச் சரிவு இப்படிப் பலவகையான இழப்புகள் தோன்றும்போது சமாளிக்க முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் எழுவது இயற்கை.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். எனக்குத் தெரிந்த முருகன் என்பவர் காலையில் வேலைக்குப் புறப்பட்டார். டீ குடிக்கலாமே என்று வழியில் இருந்தடீ கடைக்குச் சென்று, உள்ளே அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தபோது யாருமே எதிர்பார்க்காத வகையில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி டயர் வெடித்து, தாறுமாறாக ஓடி டீக்கடைக்குள் புகுந்து, அப்பாவியாக அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த முருகன் மேல் ஏறி அவரை உயிரிழக்க வைத்தது. இதில் முருகனின் குற்றம் என்ன? ஒன்றுமில்லை.