

இந்தத் தொடரில் நாம் பல விஷயங்களைப் பற்றிச் சிந்தித் திருக்கிறோம். ‘இந்தத் தொடர் மூலம் பல நல்ல விஷயங்களை, வாழ்க்கைக்கு உகந்தவற்றைத் தெரிந்துகொண்டோம்’ என்று சொல்கிறவர்களிடம், ‘நீங்கள் எதைத் தெரிந்துகொண்டீர்கள்’ எனக் கேட்டால், “சட்டென்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை” என்பார்கள். இது எதைக் காட்டுகிறது? படித்ததை மூளைக்கும் மனதுக்கும் அவர்கள் கொண்டுசெல்லவில்லை. நாள்தோறும் நம்மைச் சுற்றிப் பல நல்ல விஷயங்கள் நம் வாழ்க்கையை மிகவும் உயர்வாக வழிகாட்டும் விஷயங்கள் நடக்கின்றன. அவற்றை நாம் சரியான விதத்தில் உள்வாங்கிக்கொள்கிறோமா?
ஆழமாகப் புரிந்துகொள்வோம்: ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்வது வேறு, புரிந்துகொள்வது வேறு. சாலையில் நடக்கும்போது, புத்தகத்தைப் படிக்கும்போது, திரைப்படங்களைப் பார்க்கும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும்போது, ஒரு கூட்டத்துக்குச் செல்லும்போது, நண்பர்களைச் சந்தித்துப் பேசும்போது பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். ஆனால், அவற்றில் எத்தனை விஷயங்களை நாம் உள்வாங்கிக்கொள்கிறோம், சரியாகப் புரிந்துகொள்கிறோம்? சல்லடையில் நாம் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீரெல்லாம் கீழே போய்விடும். நாம் கேட்கும் விஷயங்கள் எல்லாம் சல்லடைத் தண்ணீராக வடிந்துவிடாமல் மனதில் தேங்கி நிற்கின்றனவா? வடிந்து வீணாகிவிடாமல், மனதுக்குள் தேங்கி நிற்பதற்குத்தான் உள்வாங்குதல் என்று பெயர் (Internalisation).