

நம்மில் பலருக்கும் எதிலுமே பொறுமை இருப்பதில்லை. வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் பேச்சை மற்றவர் கேட்கக்கூடப் பொறுமையில்லை. கேட்டால் நேர மில்லை என்பார்கள். அதேபோல் வீட்டுப் பெரியவர்களின் தேவைகளையும் குழந்தைகளின் பள்ளி சார்ந்த விஷயங்களையும் நண்பர்களைப் பற்றிய விவரங்களையும் குறித்துத் தெரிந்துகொள்ள நேரமில்லை.
இரண்டு நண்பர்கள் சந்தித்துத் தங்களது வாழ்க்கையை நிதானமாக அலச நேரமில்லை. இப்படி எல்லாரும் நேரமில்லை, நேரமில்லை என்கிறோமே, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நேரம் இல்லாமல் இல்லை; 24 மணி நேரத்தை முக்கியத்துவத்தின் வரிசைப்படி பகிர்ந்து திட்டமிட்டுச் செயல்பட நமக்குப் பொறுமை இல்லை.
எங்கும் கோபம், எதிலும் எரிச்சல்: அறிவியல் முன்னேற்றம் மிகவும் நல்லதுதான். அதன் மூலம் பல நன்மைகளை நாம் அனுபவிப்பதும் உண்மை. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல இந்த நவீன சாதனங்களின் அருமை புரியாமல் அவற்றுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள நாம் இடம் கொடுத்துவிட்டோம்.
இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஒரே வீட்டில் அப்பா அலுவலக அறையில் இருப்பார், அம்மா வரவேற்பறையில் இருப்பார், பிள்ளைகள் அவர்களுடைய அறைகளில் இருப்பார்கள். ‘சாப்பிட வாங்க’ என்று ஒரு குரல் கொடுத்தால் எல்லாரும் சாப்பாட்டு அறைக்கு வந்துவிடலாம்.