

முடக்கும் நம்பிக்கைகள், சகுனம் போன்றவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் மக்களின் சிந்தனையைத் திசைதிருப்பும் இன்னொரு நம்பிக்கையைப் பற்றியும் எழுதவேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இந்த வாரம் சிந்திக்கலாமா? கடந்த சில ஆண்டுகளாக வாஸ்து, ஃபெங்சூயி (Feng Shui) போன்றவற்றைப் பற்றி எல்லாரும் பேசத் தொடங்கி யிருக்கின்றனர். வீட்டை வாஸ்து முறைப்படி கட்டினால்தான் நல்லது நடக்கும் என்கிறார்கள். அதேபோல் வீட்டில் ஃபெங்சூயி எனும் சீன முறைப்படி மீன் தொட்டியை வைத்தால், நீரூற்று அமைத்தால், சைம்ஸ் என்கிற காற்றுக் கிண்கிணிகளைக் கட்டினால் நல்லது நடக்கும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இதுபோன்ற விஷயங்களில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. வீட்டில் சில மாற்றங்களைச் செய்வதால் வீடு இன்னும் அழகாகவும் நாம் பயன்படுத்த சௌகரியமாகவும் இருக்கும் என்றால் தாராளமாக அவற்றைச் செய்ய வேண்டும். ஆனால், அந்த மாற்றங்களைச் செய்வதால் மட்டுமே புதிதாகப் பல நன்மைகள் நடந்துவிடும் என்கிற வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
மனம் சோர்ந்து இருக்கும்போதோ வேதனைக்கு உள்ளாகிக் குழப்பமாக இருக்கும்போதோ மீன் தொட்டியின் அருகில் அமர்ந்து மீன்களின் ஓட்டத்தைச் சில நிமிடங்களுக்குக் கவனித்தால் மனம் லேசாகிவிடும், குழப்பம் அகலும், தெளிவு பிறக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். இதில் உண்மை இருக்கிறது, நான் மறுக்கவில்லை. ஆனால், மீன் தொட்டியை வைத்துவிட்டாலே எல்லாப் பிரச்சினைகளும் தானாகத் தீர்ந்துவிடும் என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுதானே.