

நேற்று என் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்தார். அவர் வீட்டிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலும் பகுதிநேரச் சமையல் வேலை செய்யும் பெண்மணியின் பிளஸ் டூ படிக்கும் மகன் அவன் கேட்ட மோட்டர் பைக்கை அம்மா வாங்கித்தரவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்ற செய்தியை அவள் கூறியபோது நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தது.
அப்பா குடிகாரர், அம்மாவின் சமையல் வேலை வருமானம்தான் குடும்பத்தை நடத்த உதவுகிறது என்பதெல்லாம் பிளஸ் டூ படிக்கும் மாணவனால் புரிந்துகொள்ள முடியாதா? தங்கள் குடும்பச் சூழலை மறந்து தங்கள் சக்திக்கு மீறின விஷயத்துக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காது என்று தெரிந்ததும் தற்கொலை செய்துகொள்வதுதான் பிரச்சினைக்குத் தீர்வா?