

அதீத நம்பிக்கைகள், மனிதப் பண்புகளையும் வளர்ச்சியையும் முடக்கும் நம்பிக்கைகள் தேவையா என்பதைப் பற்றி நாம் கடந்த அத்தியாயத்தில் சிந்தித்தோம். கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் அவர் ஒரு வேலைக் கையில் வைத்துக்கொண்டு, ‘நிற்க பயம், உட்கார பயம், சாப்பிட பயம், தூங்க பயம், பாட்டுக் கேட்டால் பயம், காரில் சென்றால் பயம்...’ என்று வாழ்க்கையில் நாம் என்னென்ன செய்கிறோமோ அத்தனை விஷயங்களையும் சொல்லி ‘பயம் பயம்’ என்பார்.
அது சிறந்த நகைச்சுவைக் காட்சி என நாம் சிரித்தோம். ஆனால், நண்பர்களே இப்படித்தான் சிலர் உட்கார, நிற்க, நடக்க, சாப்பிட, வேலைக்குப் புறப்பட, பயணம் செல்ல என அனைத்துக்கும் ஒருவிதத் தயக்கம், பயத்துடனேயே சகுனம் பார்க்கிறார்கள். சகுனம், நேரம் போன்றவை அளவுக்கு மீறி நோய் போல ஒருவரின் குணமாகவே மாறிவிடுவது சரியா என்பதைத்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.