

யார் தற்கொலை செய்துகொள்கிறார்கள், அதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்த்தோம். ஏற்கெனவே சொன்னதுபோல் 15 – 40 வயது வரை இருக்கிறவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்கின்றன. தற்கொலைக்கு முக்கியக் காரணமான மனச்சோர்வு - மன அழுத்தத்துக்குப் பணக்காரர் - ஏழை, படித்தவர் - படிக்காதவர், சிறியோர் - முதியோர் என்கிற பாகுபாடே கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் மனச்சோர்வு - மன அழுத்தம் ஏற்படலாம்.
உலக சுகாதார நிறுவனம் தற்கொலை குறித்துப் பல நாடுகளிலும் ஆய்வுகள் நடத்தியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரம் இது. ஆஸ்திரேலியாவில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறக்கிறபோது, 30 பேர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார்களாம். இந்தியாவில் இது 1:5 என்கிற விகிதத்தில் இருக்கிறது. அதாவது, ஆஸ்திரேலியாவில் தற்கொலைக்கு முயலும் 60 பேரில் 2 பேர் இறக்கையில் இந்தியாவிலோ தற்கொலைக்கு முயலும் ஐந்து பேரில் ஒருவர் இறக்கிறார். இது அதிர்ச்சி தரும் தகவல் அல்லவா. இது குறித்து நாம் ஒவ்வொருவரும் சமுதாயமும் அரசாங்கமும் தீவிரமாகச் சிந்தித்து ஆவண செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.