

தமிழ்நாட்டில் 2026 மே மாதம் அமைய விருக்கும் அரசு, பெண்களின் வாழ்க்கையை உண்மையாக மாற்ற வேண்டுமெனில், அது ஓர் அடிப்படை உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பெண்கள் இன்னும் சமத்துவமற்ற சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை தனிப்பட்ட தவறுகளின் விளைவு அல்ல; சமூக அமைப்பு சார்ந்த சுரண்டலின் வெளிப்பாடு.
இன்று பெண்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது, அவை ‘பாதுகாப்பு’, ‘நலத்திட்டங்கள்’, ‘சமூக நலன்’ போன்ற சொற்களுக்குள் மட்டுமே சுருக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், பெண்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பவை ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல், அரசியல் அதிகாரம் ஆகிய மூன்று அடிப்படைக் கட்டமைப்புகள். பெண்களின் மீதான அடக்குமுறை என்பது குடும்பத்திலும் பணியிடங்களிலும் அரசியல் அமைப்புகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது.