

புரதம், விட்டமின்கள், தாது உப்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறித்து இந்தியச் சமூகத்தில் புரிதல் மேம்பட்டிருப்பதற்கு ஒரு பெண் செய்த பங்களிப்பு இன்றியமையாதது. உயிர் வேதியியலாளரும் ஊட்டச்சத்து அறிவியலாளருமான கமலா சோஹோனிதான் அவர். இந்தியாவில் அறிவியல்புலத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்கிற அடையாளமும் இவருக்கு உண்டு.
படிப்பும் போராட்டமும்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கமலா 1912இல் பிறந்தார். அவருடைய அப்பா பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பட்டம் பெற்றவர். கமலாவுக்கும் அறிவியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பம்பாய் பல்கலைக் கழகத்தில் வேதியியலில் இளங்கலை முடித்தார். முதுகலை படிக்க பெங்களூரு அறிவியல் கழகத்தில் சேர வேண்டும் என்கிற அவரது லட்சியத்துக்குப் பாலின பேதம் தடையாக இருந்தது. பெண் என்பதால் கமலாவைச் சேர்த்துக்கொள்ள நிறுவனத்தின் அப்போதைய தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான சர்.சி.வி.ராமன் மறுத்தார்.
கமலா அமைதியான வழியில் போராடித் தனது உரிமையை நிலைநாட்டினார். சில நிபந்தனைகளுடனேயே அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. சக மாணவர்களான ஆண்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் கமலா நடந்துகொள்ளக் கூடாது என்பது அவற்றுள் ஒன்று. எனினும், ஓராண்டிலேயே நிபந்தனைகள் விலக்கிக்கொள்ளப்படும் அளவுக்கு கமலாவின் கல்விச் செயல்பாடு இருந்தது. நுண்ணுயிரியல் துறையில் முன்னோடிப் பேராசிரியராக விளங்கியவர் எம்.ஸ்ரீனிவாசய்யா. அவரது வழிகாட்டலின்கீழ் பருப்பு வகைகளிலும் பாலிலும் உள்ள புரதச்சத்து குறித்து கமலா ஆய்வு செய்தார்.