

செவிலியாக வேலை பார்க்கும் ஒருவர் சாலையில் வைத்து இன்னொரு பெண்ணை மிகவும் தரக்குறைவாகப் பேசி, காறி உமிழ்ந்து திட்டிக்கொண்டிருந்ததைப் அண்மையில் பார்க்க நேரிட்டது. சம்பந்தப்பட்ட பெண் அழுகையும் அவமானமும் தாக்க, விட்டால் போதுமென்று பரிதவித்து நின்றார். திட்டிக்கொண்டிருந்த பெண்ணோ அந்தப் பெண்ணை அடிக்கவும் தயார் நிலையில் நின்றார். ‘என்ன சம்பவம்?’ என விசாரிக்கையில் செவிலிப் பெண்ணின் கணவனுக்கும் திட்டு வாங்கிய பெண்ணுக்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு குறித்த விவகாரம் எனத் தெரியவந்தது.
நாளுக்குள் நாள் அதீத வேகத்துடன் பரவிக் கொண்டிருக்கும் இந்த வகையான தொடர்புகளுக்கும் அன்புக்கும் உறவுகளுக்கும் பலவிதமான பெயர்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் பெரும் பாதிப்பைப் அடைகிறவர்கள் பெண்களே. தங்கள் கணவனின் அனுமதியும் விருப்பமும் இல்லாமல் இன்னொரு பெண் அவன் கைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை என்பது இங்கே பல பெண்களுக்குப் புரிவதே இல்லை. தனக்கு மணமாகவில்லை என்று சொல்லி பிற பெண்களை அன்பு என்னும் வலையில் சிக்க வைக்கும் ஆண்கள் பலர்.