

குடும்பப் பொறுப்புகளையும் பொருளாதாரச் சுதந்திரத் துக்கான பணிகளையும் செய்து கொண்டே அரசியல், சமூகப் பணிகளை ஆற்றும் பெண்களின் எண்ணிக்கை தற்போது பெருகிவருகிறது. அவர்களைப் பார்த்துச் சிலர், ‘இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ.. எப்படித்தான் இதுபோன்ற சவாலான வேலைகளைச் செய்கிறார்களோ’ என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், அரசியலுக்கு வரும் பெண்களின் வலிகள் இன்னமும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.
மூன்று தளங்களில் போராட்டம்: அரசியலுக்கு வருகிற ஆணுக்குக் கிடைக்கிற சுதந்திரம் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று தளங்களில் போராட வேண்டியுள்ளது. சமையல், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்தாலும் குடும்பத்தார் சொல்லும் குறைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது முதல் தளம்.
அலுவலக வேலைகளில் திறமையை நிரூபித்துப் பொருளாதாரரீதியாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருப்பது இரண்டாம் தளம். உடன் பணிபுரிவோர், அதிகாரிகளின் சகிக்க முடியாத நெருக்கடிகளை எதிர்த்துப் போராட வேண்டியிருப்பது மூன்றாம் தளம். இவற்றையெல்லாம் கடந்து, தங்களுக்கான சிறு ஓய்வு நேரத்தையும் தூக்கத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் அரசியல் போராட்டத்துக்குப் பெண்கள் வருகிறார்கள். இப்படி வரும் பெண்களின் உணர்வுகளை மதித்து, கட்சியின் - அமைப்பின் பொறுப்பாளர்கள் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களது உழைப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.