

நம் நாட்டில் பாலினச் சமத்துவம் குறித்துப் பேசுவது எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவுக்குத் திருநர் சமூகம் குறித்தும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட வேண்டும். ஒருகாலத்தில் திருநருக்கு உயர்கல்வி கிடைப்பதே அரிதாக இருந்தது. சக மாணாக்கர் மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கே திருநர் குறித்த புரிதல் குறைவாக இருந்தது. குறிப்பாகத் திருநம்பிகள் குறித்து யாரும் யோசிக்கக்கூட இல்லை.
திருநர் சமூகத்துக்குக் கல்வி எட்டாத உயரத்தில் இருந்தது என்பதற்கு நானும் ஒரு சான்று. பாலின அடையாளம் காரணமாக 30 ஆண்டுகளுக்கு முன் கல்லூரிக்குப் போக முடியாத நிலையில் மேல்நிலைப் பள்ளியோடு எனது படிப்புக்கு முழுக்குப் போடவேண்டிய கட்டாயம். கல்வி நிலையங்களில் சாதிரீதியாக இருந்த இடைவெளியை இடஒதுக்கீடு ஓரளவுக்குச் சமப்படுத்தியபோது, பாலினரீதியான புரிதல் ஏற்படவில்லை. அப்போதைய ஆட்சியாளர்களும் திருநர் விழிப்புணர்வு குறித்தெல்லாம் யோசித்ததில்லை.