

ஒரு காலத்தில், “பார்ரா பொம்பள சைக்கிள் ஓட்டுது” என்று கிராமத்துச் சிறுவர்கள் வாயைப் பிளந்துகொண்டு அதிசயமாகப் பார்த்த காட்சிகளும் பேச்சுகளும் கிராமப்புறங்களில் முழுமையாக ஒழிந்துவிட்டன என்று இன்றும் சொல்லிவிட முடியாது. ‘பூம்பூம் மாட்டுக்காரர்கள்’ என்றும் ‘ஆதியன்’ என்றும் அழைக்கப்படுகிற நாடோடி மக்களின் குழந்தைகளுக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடத்தப்படுகிற ‘வானவில்’ பள்ளியின் முதல் தலைமுறைப் பட்டதாரிகளில் ஒருவரான பரமேஸ்வரி, “எங்கே சுத்தினாலும் சாயந்திரம் ஆறு மணிக்கு வீடு வந்துரணும். இல்லைனா அவ்வளவுதான். நான் படிச்சுட்டதால டெல்லிவரை பயணம் பண்ணிட்டேன். ஆனாலும் இன்னமும் எங்க போறேன்னு சொல்லி வீட்டில் அனுமதி வாங்கித்தான் போறேன்” என்கிறார்.
தமிழ்நாட்டு நகரங்களின் கதை தனிதான். புயல் வேகத்தில் தமிழ்நாடு நகரமயமானாலும் நகரத்துப் பெண்களின் ‘நடமாடும் உரிமை’கள் மந்தமாகத்தான் பயணம் செய்கின்றன.
நடமாடும் உரிமைகளின் வரலாறு: இந்தியப் பெண்களின் ‘நடமாடும் உரிமை’களின் வரலாறு என்பது பெண் விடுதலைப் போராட்டத்தின் வரலாறு ஆகும். பல நூற்றாண்டுகளாகப் பெண்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. பெண்களின் உடல்கள் மட்டுமல்ல; அவர்கள் செல்லும் இடங்கள், சந்திக்கும் மனிதர்கள், பொதுவெளியில் அவர்கள் செலவிடும் நேரம் என அனைத்தையும் ஆணாதிக்கச் சிந்தனைதான் நிர்ணயித்து வருகிறது. ‘எங்கே போகிறாய், எப்போது திரும்புவாய்?’ எனும் கேள்விகளை எதிர்கொள்ளாத பெண்களே இருக்க முடியாது. அத்தகைய சூழல்களிலும் சில பெண்கள் எல்லைகளை உடைத்தனர்.