

ரிதன்யா, விஸ்மயா, திவ்யா, உத்ரா, அனிசியா, த்விஷா… பெண் குழந்தைக்கு வைக்கக்கூடிய அழகான பட்டியலாக நீளும் இவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளுக்குள் வரதட்சிணை - குடும்ப வன்முறை காரணமாகத் தற்கொலை / கொலைக்கு ஆளான பெண்களின் பெயர்கள்.
திருமணமாகி ஐந்தே மாதங்களில் கணவன் வீட்டில் கொடுமை தாங்க முடியாமல் மே 12 அன்று தூக்கில் தொங்கிய த்விஷா ஷர்மாவுக்கு மிஸ். புணே அழகிப் பட்டத்தோடு திரைப்பட நடிகை, எம்.பி.ஏ. கல்வித் தகுதி, தனியார் நிறுவனமொன்றில் உயர் பதவி எனும் பல அடையாளங்கள் இருந்துள்ளன. திருமணம், குடும்ப வாழ்க்கை எனும் பாதையில் பயணிப்பதற்காக அவை அனைத்தையும் துறந்தார்.