

நான் பிறந்து வளர்ந்த ஊரான பொள்ளாச்சியில் எண்பதுகளில் சிறுமியாக இருந்த எனக்கு மஞ்சு என்றொரு தோழி இருந்தார். அப்போது அவருக்கு இருபத்து மூன்று வயது இருக்கும். உடைந்த ஓடுகள் சிதறிய ஒரு பழைய சிறிய வீட்டில் அவர் தனியாக வாழ்ந்துவந்தார். அவர் ஒரு திருநங்கை. அவருடைய பாலின அடையாளம் காரணமாகக் குடும்பத்தை விட்டு ஒதுக்கப்பட்டதாலும் வேலை எதுவும் கிடைக்காததாலும் வறுமையின் காரணமாகவும் கல்வி மறுக்கப்பட்டதன் விளைவாகவும் பகல் நேரத்தில் அவர் யாசகம் கேட்டும் இரவு நேரத்தில் பாலியல் தொழில் செய்தும்தான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார்.
ஆணாகப் பிறந்திருந்தாலும் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து தன் சுய அடையாளத்தில்தான் வாழ வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் எத்தனையோ புறக்கணிப்புகளை, கேலிகளை, கிண்டல்களை தாங்கிக்கொண்டு இந்தச் சமூகத்தில் வாழ்ந்துவந்தார்.
சிறு வயதிலேயே நான் யார் என்பதை உணர்ந்துவிட்டேன். நான் யாராக வாழ விரும்புகிறேன், எந்தப் பாலின அடையாளத்தில் நான் நானாக வாழ முடியும் என்பதையும் தெளிவாக அறிந்திருந்தேன்.