

‘மனைவி என்பவர் வீட்டு வேலைப் பணியாளர் அல்ல; வாழ்க்கைத் துணை. மனைவி வீட்டு வேலை செய்யாததை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க முடியாது. வீட்டு வேலைகளில் ஆண்களும் பங்களிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அழுத்திச் சொல்லும் அளவுக்குத்தான் நாம் ‘முன்னேறியிருக்கிறோம்’. 21ஆம் நூற்றாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட அல்லது கேலிக்கு உள்ளான(கும்) கோட்பாடுகளுள் ஒன்று பெண்ணியம்.
முற்போக்குச் சிந்தனையாளர்கள் எனத் தங்களைக் காட்டிக்கொள்ளும் அறிவுஜீவிகள் பெண்களின் உரிமைக்குரலை வளரிளம் பருவத்து மனோபாவத்துடனான எள்ளலோடு கடந்துபோய் விடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு கடந்துபோவதற்கு ‘ஆண்’ என்கிற தகுதி போதுமானது என நினைக்கிறார்கள்.
சமூக, பொருளாதார, அரசியல் செயல்பாடுகளுக்குப் பெண்களின் இயங்குவெளியும் அடிப்படையாக இருக்கிறது. அதை ஒட்டுமொத்த சமூகமும் வசதியாக மறைத்துவிடுகிறது. ஒரு குடும்பத்தில் அல்லது சமூகத்தில் பெண்களின் இருப்பு அல்லது பங்களிப்பு முக்கியத்துவம் பெறாததற்கு, அதற்குச் சந்தை மதிப்பு இல்லாததே காரணம்.
குடும்பத்தில் பெண்ணின் உழைப்புக்குப் பெயர் ‘கடமை’. அந்தக் கடமை, உணர்வுகளோடு இணைக்கப்பட்டது. தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த அளவீடுகளைக் கொண்டே பெண் மதிப்பிடப்படுகிறாள். ஆணின் உழைப்புக்குப் பெயரும் கடமை என்றாலும், அது பெண்ணின் உழைப்பைவிட மதிப்புமிக்கதாகக் கருதப் படுகிறது, கொண்டாடப்படுகிறது.