

செவ்விந்தியக் குழந்தைகளை அமெரிக்கக் காலனியாதிக்கத்துக்கு மாற்றும் பொருட்டு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலம்வரை அமெரிக்காவிலும் கனடாவிலும் பல அமெரிக்க இந்திய உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டுவந்தன. அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் இருந்த ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்ட ஒன்பது குழந்தைகள் தற்போது தாயாக, பாட்டியாக, கொள்ளுப் பாட்டியாக ஆகிவிட்டார்கள்.
ஆனால், மிகச் சிறிய வயதில் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளில் இருந்து அவர்களால் மீளவே முடியவில்லை. காலம் பல கடந்த பிறகும் தங்களை உறங்க விடாமல் செய்கிற அந்த வாதையை வெல்ல அவர்கள் முடிவெடுத்தனர். குற்றவாளிகளை அம்பலப்படுத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் ஓரளவுக்கு மன நிம்மதி கிடைக்கும் என்பதால், அவர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.