

வாழ்க்கை என்பது ஒரு கூட்டுப் பயணம். அந்தப் பயணத்தில் ஒருவரின் பாரத்தை மற்றொருவர் பகிர்ந்து கொள்ளும்போது அங்கே அன்பும் பாசமும் கவிதையாக மலர்கின்றன. என் மனைவியின் வாழ்க்கை ஓயாத பரபரப்புக் களம். அவர் ஒரு வழக்குரைஞர். ஒருபுறம் நீதிமன்றப் பணிகள், மறுபுறம் வழக்காடிகளின் இடைவிடாத அழைப்புகள் என எப்போதும் பரபரப்பிலேயே இயங்குவார்.
நீதிமன்றப் பணிகள், வீட்டு வேலைகள், இவற்றுடன் மாவட்ட நீதிபதி தேர்வுக்கான படிப்பு என அவர் அல்லாடிக் கொண்டிருந்த வேளையில்தான் அடுக்களையில் நுழைய முடிவெடுத்தேன். ஒரு கையில் செல்போன், மறு கையில் கரண்டி என அவர் இயங்கியதை மாற்ற விரும்பினேன். அவர் மாவட்ட நீதிபதி தேர்வின் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்று, முதன்மைத் தேர்வுக்குத் தயாரானபோது அவரின் உழைப்பு இன்னும் அதிகரித்தது. அந்தச் சூழலில், ‘வீட்டு வேலைகள் பெண்களுக்கு மட்டுமேயானவை' என்கிற மாயத்திரை என் மனதிலிருந்து விலகியது.