

குடும்பத்தில் ஆணின் கரங்களே ஓங்கியிருக்க வேண்டும் என்கிற சிந்தனை என்னையும் அறியாமல் என்னுள் வேரோடியிருந்தது. காரணம் அப்பாவும் அம்மாவும். வீடு சார்ந்த அனைத்திலும் முடிவெடுக்கிறவர் அப்பாவாகவும் அவற்றைச் செயல்படுத்துகிறவர் அம்மாவாகவும் இருந்தனர். சமையலறை என்பது பெண்களுக்கானது என்பதுதான் உலக விதி எனப் புரிந்துவைத்திருந்தேன். கல்லூரிப் படிப்பும் வாசிப்பும் என் பார்வையை மாற்ற உதவின. முற்போக்குச் சிந்தனை கொண்ட நண்பர்கள் வாய்த்தது என் பேறுகளில் ஒன்று.
கல்லூரி விடுமுறையின் போது வீட்டுக்குச் சென்றால் சமையலில் உதவும் என்னை ஆச்சரியத்தோடு பார்ப்பார் அம்மா. அவரிடமே சமையலையும் கற்றுக்கொண்டேன். சில நாள்கள் நானே சமைப்பேன். அப்பா பெரிதாக எதையும் கண்டுகொண்டதில்லை. ஆனால், என் சிறு உதவிகூட அம்மாவுக்கு எவ்வளவு ஆசுவாசத்தைத் தருகிறது எனப் புரிந்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு நான் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதைப் பார்த்து என் மனைவி அதிசயித்தார். அதுவே எங்களுக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கக் காரணமாகவும் அமைந்தது. தினமும் இரவுச் சமையல் என்னுடையது.