

எனக்கு 86 வயதாகிறது. திருமணமாகி 58 வருடங்களாகின்றன. மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி எல்லாம் இருக்கிறார்கள். நானும் என் மனைவியும் தனியாக வாழ்ந்துவருகிறோம். 80 வருடங்களுக்கு முன் இருந்த குடும்ப அமைப்பைப் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.
குடும்பத்துக்குத் தேவையான பொருள் தேடிக்கொண்டு வருவது மட்டும்தான் ஆண்கள் வேலை. ஆண்கள் சமையலறைக்குச் செல்வதையும் சமைப்பதையும் அந்தக் காலத்தில் யார் பார்த்தாலும் பரிகாசம் செய்வார்கள். பொதுவாக, வீட்டில் சமைக்கும் ஆண்களை மரியாதை குறைவாகத்தான் பார்ப்பார்கள். சமையல் செய்வது பெண்களின் வேலை என்று உறுதியாக அந்தக் கால மக்கள் நம்பினார்கள். பெண்கள் வெளியே வேலைக்குப் போய் சம்பாதிப்பதையும் விரும்ப மாட்டார்கள். இது அன்றைய நிலைமை.