

அன்பு எப்போது உரிமையாகிறது, உரிமை எப்போது கட்டுப் பாடாகிறது? அண்மையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒரு கடினமான உறவைப் பற்றி வெளிப்படையாகப் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த உறவில் தான் ‘narcissistic abuse’ என்பதை அனுபவித்ததாக அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அனுபமாவின் அனுபவம் ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. இதுபோன்ற அனுபவங்கள் பிரபலங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ள இளம் தலைமுறையினரிடமும் இருக்கின்றன. ஒரு கல்லூரி மாணவி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அது சாதாரண நட்பாகத்தான் தொடங்கியது. இருவரும் ஒருவரை அடுத்தவர் புரிந்துகொண்டு, அன்பாகப் பழகினார்கள். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வந்தார்கள்.
அன்பு எப்போது கட்டுப்பாடாகிறது? - அதுவரை அழகானதாக இருந்த அன்பு, ஒரு கட்டத்தில் கட்டுப்பாடாக மாறத் தொடங்கியது. அது அந்த இளைஞரிடம் மட்டும் இருந்த கட்டுப்பாடு அல்ல. அவருடைய குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், கருத்துகள், தலையீடுகள் போன்றவை அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையில் இடம்பெறத் தொடங்கின. அப்போது அந்த மாணவிக்கு ஒரு கேள்வி எழுந்தது: ‘திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்பதற்காக, நான் என்னுடைய தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் இழக்க வேண்டுமா?’